அனைத்துப் புனிதர்களின் விழா

புனிதம் என்பது திருச்சபையால் கொடுக்கப்படும் மிகப்பெரிய மணிமகுடம். நிறைவாழ்வை தங்கள் பலவீனங்களோடு, குறைகளோடு நிறைவாக வாழ முற்பட்டவர்களை, தாய்த்திருச்சபை புனிதர்கள் என்று, போற்றி பெருமைப்படுத்துகின்றது. திருச்சபையினால் அங்கீகரிக்ப்பட்ட புனிதர்கள், இன்னும் வெளிஉலகிற்கு தெரியாமல் புனித வாழ்க்கை வாழ்ந்தவர்களும், நிச்சயம் இந்த உலகத்தில் ஏராளமான பேர் இருப்பார்கள். அவர்களையெல்லாம் இந்த நாளிலே நாம் சிறப்பாக நினைவு கூற வேண்டும்.

இந்த விழாவானது, அனைத்து ஆன்மாக்கள் தினத்திற்கு முன்னதாக, நவம்பர் முதல் தேதியில் கொண்டாடப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில், கீழைத்திருச்சபையில் நினைவுகூர்ந்து சிறப்பிக்கப்பட்ட மறைசாட்சிகளின் நினைவுநாளே பிற்காலத்தில் அனைத்து புனிதர்களின் பெருவிழாவாக உருவாவதற்கு காரணமாக அமைந்தது. திருத்தந்தை மூன்றாம் கிரகோரி அவர்கள், புனித பேதுரு பேராலயத்தில் அனைத்து புனிதர்களையும் மறைசாட்சிகளையும் நினைவுகூறும் அடையாளமாக, சிற்றாலயம் ஒன்றை எழுப்பி, அவர்களை மாட்சிமைப்படுத்தினார். இதுவே நவம்பர் முதல் தேதியில் அனைத்து புனிதர்களின் தினமாக அனுசரிக்க, தூண்டுதலாக அமைந்தது. இடைக்காலத்தில் அனைத்து புனிதர்களின் விழாவிற்காக இரவு திருவிழிப்பு மற்றும் எட்டுநாள் கொண்டாட்டம் தொடங்கியது. பின்னர், 1955 ம் ஆண்டில் நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பில், இவ்விழாவிற்கான திருவிழிப்பு மற்றும் எட்டுநாள் கொண்டாட்டங்கள் நீக்கப்பட்டன.

புனித வாழ்வு வாழ்ந்த இந்த புனிதர்களிடம், நாம் அனைவரும் இணைந்து, நமக்காகவும், நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்காகவும், பரிந்து பேச மன்றாடுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

நாமும் புனிதர்களே !

புனிதர்கள் மொத்தம் எத்தனை பேர் என்று உங்களுக்குத் தெரியுமா? நினைவிலிருந்து சில பெயர்களைச் சொல்லச் சொன்னால், இருபது பெயர்களுக்குப் பிறகு யோசிக்கத் தொடங்கி விடுவோம். புனிதர்களின் பிரார்த்தனையில் ஏறக்குறைய 50 புனிதர்களின் பெயர்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இணைய தளத்தில் நுழைந்து பார்த்தால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புனிதர்களின் பெயர்களைப் பார்க்கலாம். இவர்களெல்லாம் திருச்சபையால் புனிதர்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்கள்தான். உண்மையில், இறைத் திருவுளத்தின்படி வாழ்ந்து, இன்று விண்ணி;ல் இறையின்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் என்னும் பார்வையில் பார்த்தால், இலட்சக்கணக்கான புனிதர்களை எண்ணலாம்.

இன்றைய நாளில் திருச்சபை அனைத்துப் புனிதர்களையும் நினைவுகூர்ந்து, இறைவனைப் போற்றுகிறது. நன்றி கூறுகிறது. பெயர் தெரிந்த, பெயர் தெரியாத அனைத்துப் புனிதர்களையும் இன்று எண்ணிப்பார்க்கிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். புனிதர்கள் என்பார் யார்? தங்களுடைய வாழ்வையும், பணியையும் இறைவனின் விருப்பத்துக்கேற்ப அமைத்துக்கொண்டவர்கள்தான் புனிதர்கள். இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்கும் மலைப்பொழிவைத் தம் வாழ்வாக்கிய அனைவருமே புனிதர்கள்தான். இந்த நாள் நமக்கு விடுக்கும் அழைப்பு: நாமும் புனிதராக வாழவேண்டும். புனித வாழ்வை விரும்ப வேண்டும். புனிதர்கள் என்பவர்கள் நமக்கு அப்பாற்பட்டவர்கள், வியத்தகு வரங்களைப் பெற்றவர்கள் என்று எண்ணாமல், அவர்களும் நம்மைப் போன்ற நிறைகளும், குறைகளும் கொண்டவர்களே என்பதையும், ஆனால், நாள்தோறும் தங்கள் வாழ்வை இறைவார்த்தையின்படி நடத்தியவர்கள் என்பதையும் நினைவுகூர்ந்தால், நாமும் புனிதர்களாக வாழலாம், முயற்சி செய்யலாம்.

மன்றாடுவோம்: புனிதர்களின் பேரின்பமே இறைவா, தங்கள் வாழ்வில் உம்மை மாட்சிப்படுத்தி, இன்று உம்மோடு வாழும் பேறுபெற்ற அனைத்துப் புனிதர்களுக்காகவும். அவர்களுக்கு நீர் அளித்த மாட்சியின் மணிமுடிக்காகவும் உம்மைப் போற்றுகிறோம். இறைவா, எங்கள் வானகத் தந்தையாகிய நீர் தூயவராய், இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல. நாங்களும் வாழவும், அதன்வழி புனிதர்களாய் மாறவும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ அருள்தந்தை குமார்ராஜா


Attend Monthly Bible quiz contesthttps://www.mygreatmaster.com/biblequiz/

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.