அன்பும், அமைதியும் அளிக்கும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

அன்பான சகோதர,சகோதரிகளே!நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நாம் நம்முடைய நம்பிக்கையில் நிலைத்திருந்து நம்மையே சோதித்து பார்த்து நம் நடக்கையை சீர்தூக்கிப் பார்ப்போம். ஒருவருக்கொருவர் மன ஒற்றுமையுடன் இருந்து ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து அமைதியுடனும்,பொறுமையுடனும் வாழும் பொழுது நமது ஆண்டவரும் நமக்கு தமது அன்பையும், அமைதியையும் அளித்து நம்மோடு கூடவே இருந்து நாம் செல்லும் இடமெங்கும் நமது கரம் பிடித்து வழிநடத்தி நாம் விரும்பி கேட்கும் யாவையும் கொடுத்து நமது மனவிருப்பங்கள் முழுவதையும் நிறைவேற்றி நம்மை அரவணைத்து, ஆசீர்வதித்து காத்தருள்வார்.

கர்த்தர் உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். அதுபோல் நாமும் ஒருவடோருவர் அன்பு வைத்தால் அவருடைய பிள்ளைகளாய் அவருடைய பிள்ளைகள் என்ற நற்சாட்சியை பெற்று வாழலாம். ஏனெனில் நாம் இயேசுவினிடத்தில் நம்பிக்கை கொண்டால் அவரை அனுப்பிய பிதாவினிடத்திலும் நம்பிக்கை கொள்கிறோம். அவரை யூதாஸ் காட்டிக்கொடுப்பது தெரிந்தும் அவனை ஆண்டவர் வெறுக்கவில்லை. அவனை சிநேகதனே நீ செய்ய வேண்டியதை சீக்கிரமாய் செய் என்றே கூறி முடிவு பரியந்தம் அவன்மேல் அன்பு வைத்திருந்தார். அவன் மனந்திருந்தி ஒருவேளை மன்னிப்பு கேட்டிருந்தால் இரக்கமே உருவானரும், அன்பே உள்ளவருமான நமது ஆண்டவர் அவனுக்கு மன்னிப்பை அளித்து அமைதியை வழங்கியிருப்பார்.

ஆண்டவர் சகல அதிகாரமும் உள்ளவராய் இருந்தாலும் தமது அன்பை நிலைநாட்ட முடிவுவரை தன்னை தாழ்த்தி தமது பிதாவின் சித்தத்திற்கு செவிகொடுத்து தமது கடமையை அன்பால் நிறைவேற்றி தமது உயிரை கொடுத்து அன்பை வழங்கியுள்ளார். அவரின் சாயலாக படைக்கப்பட்ட நாமும் அவரின் எல்லா வார்த்தைகளுக்கும் கட்டளைகளுக்கும், கீழ்படிந்து அவர்மேல் வைத்துள்ள அவரின் சித்தத்தை நிறைவேற்றி அவரைப்போல் மாறுவோம். ஒருவடோருவர் மேல் அன்பு கூரும் கடனே அல்லாமல் வேறொன்றிலும் கடன்படாதவர்களாய் இருப்போம். அவருடைய தீர்மானத்தின்படி  அழைக்கப்பட்டவர்களாய் அவரிடத்தில் அன்பு கூர்ந்தால் சகலமும் நமக்கு நன்மையாகவே அமையும். அவரே நமக்கு அன்பும், அமைதியும்  அளித்து காத்துக்கொள்வார்.

ஜெபம்

அன்பின் ஆண்டவரே! நீர் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிற தேவனாய் இருக்கிறீர். உமது கரத்தில் எங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தை ஒப்புக்கொடுக்கிறோம். நீரே பொறுப்பெடுத்து பாதுகாத்துக்கொள்ளும். ஒவ்வொருநாளும் உம்மை தேடவும் உமது அன்பில் நிலைத்திருக்கவும் உதவிச் செய்யும். எங்களுக்கு ஏற்படும் எல்லா இன்னல்களிலும் தீமைகளிலும் நீரே கூடவே இருந்து உமது செட்டைகளின் நிழலில் மறைத்து பாதுகாத்துக்கொள்ளும். எங்கள் தேவைகள் யாவையும் சந்தித்து கொடுத்தருளும். மீட்பராம் இயேசுவின் நாமத்தில் மன்றாடுகிறோம் எங்கள் பிதாவே!!! ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.