அமைதியின் அரசர் இயேசு

இயேசு தன்னுடைய பணிவாழ்வின் கடைசிப்பகுதியில் இருக்கிறார். அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் ஓரளவு நிறைவேறி விட்டது. மூன்றாண்டு காலங்களாக மக்களுக்குப் போதித்து வந்திருக்கிறார். புதுமைகள் புரிந்திருக்கிறார். சீடர்களை பயிற்றுவித்திருக்கிறார். எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு முடிவு உண்டு. அதுதான், ஒட்டுமொத்த நிகழ்வின் உச்சகட்டம் என்று சொல்லப்படுகின்ற, கிளைமேக்ஸ். ஒரு திரைப்படத்தில் எவ்வளவு நேரம் தான் நாம் செலவிட்டாலும், அதனுடைய முடிவைப் பொறுத்துதான், அந்த திரைப்படம் அமையும். அதுதான் இயேசுவின் வாழ்விலும் நடக்க இருக்கிறது. இப்படியெல்லாம் இயேசு வாழ்ந்திருக்கிறாரே? அவருடைய வாழ்வின் முடிவு எப்படி இருக்கும்? எப்போது எழுதப்படும்? இதுதான் மற்றவர்கள் மனதில் இருக்கிற கேள்வி. அந்த கேள்விகளுக்கான பதில் தரக்கூடிய கடைசிக்கட்டத்தில் இயேசு இருக்கிறார். அதுதான் இந்த கடைசிப்பகுதி.

இயேசு மக்களை அமைதியின் வழியில் நடத்த விரும்பினார். தன்னை அமைதியின் அரசராக அவர் வெளிப்படுத்தினார். அவர் கழுதையில் ஏறி, “ஓசான்னா” என்று மக்களின் ஆர்ப்பரிப்போடு வந்தது, இதன் அடிப்படையில் தான். எரு”சலேம்” என்கிற வார்த்தையின் பொருளும் அமைதி தான். எருசலேமை, அதாவது கடவுளின் மக்களின் அமைதியின் பாதைக்கு அழைத்துச் செல்வது தான், இயேசுவின் பணிவாழ்வின் நோக்கமாக இருந்தது. ”இந்த நாளிலாவது நீ அமைதியின் வழியை அறிந்திருக்கக் கூடாதா?” என்கிற வார்த்தைகள் இதனைத்தான் வெளிப்படுத்துகின்றன. ஆனால், இஸ்ரயேல் மக்கள் தங்களின் தற்பெருமையிலும், ஆணவத்திலும், செருக்கிலும், தாங்கள் எப்போதும் உயர்ந்தவர்கள் என்கிற மமதையிலும் முழுக்க நாளைச் செலவிட்டனர். அதுதான், அவர்களுக்கு பேரிடியாக அமைய இருக்கிறது. அவர்களின் அழிவுக்கு அவர்களே காரணமாக போகிறார்கள்.

நமது வாழ்விலும் நாம் கடவுளின் வழியில், அமைதியின் வழியில் வாழ்வதற்கு எவ்வளவோ வாய்ப்புக்களை நமக்கு தந்து கொண்டிருக்கிறார். கடவுளின் முன்னிலையில் நல்லவர்களாக வாழ, அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த அழைப்பை நாம் ஏற்று, அவரது பிள்ளைகளாக வாழ, ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.