அவர்கள் உயிரை சாவினின்று காக்கின்றார்

திருப்பாடல் 33: 4 – 5, 18 – 19, 20, 22
”அவர்கள் உயிரை சாவினின்று காக்கின்றார்”

ஆண்டவர் அவர்கள் உயிரை சாவினின்று காக்கின்றார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகின்றார். யாருடைய உயிரை சாவினின்று காக்கின்றார்? ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போரையும், ஆண்டவரது பேரன்பிற்காக காத்திருப்போரையும் அவர் கண்ணோக்குகின்றார். ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போர் யார்? அவரது பேரன்பிற்காக காத்திருப்பவர்கள் யார்? இங்கு திருப்பாடல் ஆசிரியர் இஸ்ரயேல் மக்களை ஆண்டவர்க்கு அஞ்சி நடக்கிறவர்களாக, ஆண்டவரது பேரன்பிற்காக ஏங்கி நிற்கிறவர்களாக அறிவிக்கிறார். இது இஸ்ரயேல் மக்களின் மீட்பின் வரலாறை நினைவுபடுத்தக்கூடிய திருப்பாடல் ஆகும்.

நாடு முழுவதும் பஞ்சத்தினால் துன்புற்றபோது, எகிப்து மட்டும், யோசேப்பின் முன்மதியால் பஞ்சத்திலிருந்து தப்பியது. இஸ்ரயேல் மக்கள் தானியத்திற்காக எகிப்து வந்தபோது, யோசேப்பு வழியாக கடவுள் அவர்களுடைய பஞ்சத்தைப் போக்குகிறார். ஒருவேளை யோசேப்பு அங்கு இல்லையென்றால், இஸ்ரயேல் மக்களின் கதி, பரிதாபமான நிலையாக இருந்திருக்கும். ஆனால், ஆண்டவர் அற்புதமாக அவர்களது பஞ்சத்தைப் போக்கியதை, ஆசிரியர் நினைவுபடுத்துகிறார். இவ்வாறு இஸ்ரயேல் மக்களை சாவின் பிடியிலிருந்து விடுவிக்கிறார். ஆண்டவரது இந்த அன்புக்கு காரணமாக விளங்கியது இஸ்ரயேல் மக்கள் கடவுள் மீது வைத்திருக்கிற அன்பும், ஆற்றலுமே. ஆண்டவரை நாம் ஏற்றுக்கொள்கிறபோது, அவரது அன்பையும், அருளையும் உணர்ந்து நாம் அன்பை வெளிப்படுத்துகிறபோது, ஆண்டவர் மகிழ்ச்சியடைகிறார். நமக்கு அரண் போல இருந்து நம்மைப் பாதுகாக்கின்றார். எல்லாவிதமான தீங்குகளிலுமிருந்தும் நம்மை விடுவிக்கும் நம் அன்பு தேவனை, முழுமையாக அன்பு செய்வோம்.

கடவுளின் அன்பு எல்லாருக்குமானது. கடவுள் நம் அனைவரையும் அன்பு செய்கிறார். அந்த அன்பை உணர்ந்து, நாம் கடவுளை அன்பு செய்தற்கு அழைக்கப்படுகிறோம். தன்னுடைய மக்கள் தன்னை அன்பு செய்ய வேண்டும், தன்னிடத்தில் வர வேண்டும், தன்னிடத்தில் முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஏங்கும் தந்தையைப் போல, இறைவனும் நம் அனைவர் மீது அன்பு கொண்டிருக்கிறார்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.