அவர் ஒரு ‘மாதிரி’

மத் 6 : 7 -15
தவக்கால ஆன்மீக முயற்சிகளில் (ஈதல், செபித்தல், நோன்பிருத்தல்) ஒன்றான செபித்தல் பற்றி இன்றைய நற்செய்தி விளக்குகிறது. ஆண்டவர் இயேசுவே நம் அனைவருக்கும் அனைத்திருக்குமான மாதிரியாக இருக்கின்றார் என்பதை அவர் கற்றுக் கொடுத்த செபத்தில் இருந்தும் நம்மால் கற்றுக் கொள்ள முடிகிறது. சில பிற சபையினர் இச்செபத்தைத் தினமும் எவ்வேளையும் சொல்லும் நம் தாய் திருஅவையினரைப் பார்த்து கேளி செய்வதுண்டு, ஏன் இவர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்களென்று? இவர்கள் கேளியையும் கிண்டலையும் பார்த்து நாம் பின் வாங்கிட முடியாது. இவர்கள் இயேசுவையும் இறைவார்த்தையையும் கிண்டல் செய்கிறார்கள் என்பதே உண்மை. இயேசு கற்பித்த இச்செபமே தலை சிறந்த செபமாக இன்று உலகின் அதிக மொழிகளில் சொல்லப்படுகின்ற ஓர் முதன்மைச் செபமாகும்.

இதன் முதல்பகுதி, இறைவனின் இறையாட்சியை அதாவது இயேசு கண்ட கனவினை நோக்கி, இந்த உலகு உருண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைக்கின்றது. இதன் இரண்டாம் பகுதி இறையாட்சி எப்படி நம் மத்தியிலும் நமக்குள்ளும் நிகழும் என்பதை நமக்கு கூறுகிறது.

1. உடல் ரீதியான …… இங்கு உணவினைப் பற்றி கூறுவது நம் உடலின், உணர்வுகளின் தேவைகள் அனைத்தையும் நிறைவுபெற அவரை நோக்கி எழுப்புகின்ற மன்றாட்டாக இருக்கின்றது. இது மனிதர்களின் அடிப்படைத் தேவை. இதனைக் கடந்தால் அல்லது இதில் நிறைவு பெற்றால் மட்டுமே ஒருவனால் பிறரைச் சார்ந்த சிந்திக்கமுடியும் என்பதே திண்ணம்.

2. உறவு ரீதியான …… அடிப்படைத் தேவைகளை பற்றி பேசியப் பிறகு ஆண்டவர் உடனடியான உறவின் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றிக் கூறி அதற்காக செபிக்கக் கற்றுக் கொடுக்கிறார். உடல் ரீதியான தேவைகள் ஒரு தனிமனிதனோடு நின்று விடுகிறது. இந்த உறவு என்பது ஒரு குமுகத்தின் தேவையாக மாறுகிறது. இங்கு பிறரோடு உள்ள உறவும் கடவுளோடு உள்ள உறவும் மிக முக்கியம்.

3. ஆன்மீக ரீதியான ….. எவனொருவன் முதல் இரண்டு தேவைகளையும் கடக்கின்றானோ அவனால் மட்டுமே (சில விதிவிலக்குகள் அப்பாற்பட்டவை) ஆன்மீகத்தில் நிறைவு காணமுடியும். ஆனால் இந்த ஆன்மீக தேவைகளுக்கு தடையாக இருப்பது ‘தீயோன்’. இவனை அல்லது இதை விரட்டியடிக்க, வெற்றிக்கொள்ள நமக்கு கண்டிப்பாக கடவுளின் துணையும் கொடையும் வேண்டும்.

இவ்வாறு ஒரு சிறிய செபத்தில், ஆண்டவர் நம் வாழ்க்கை தத்துவத்தையும், ஆன்மீக முதிர்ச்சியையும் உண்மையான சீடத்துவத்தையும் விளக்குகிறார். ஆனால் இன்று நாம் எவ்வாறு செபிக்கிறோம்? சிந்திப்போம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.