ஆண்டவரிடம் பேரன்பும் மீட்பும் உள்ளது

திருப்பாடல்130: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8

குற்றங்களைச் செய்துவிட்ட ஒரு மனிதனின் உள்ளத்திலிருந்து, கடவுளின் இரக்கத்திற்காக ஏங்கக்கூடிய பாடல் தான் இந்த திருப்பாடல். கடவுள் செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் மறந்து, தவறு செய்துவிட்டு, அந்த தவறை நினைத்து மீண்டும், மீண்டுமாக வருந்தக்கூடிய இந்த பாடல், ஏறக்குறைய நமது வாழ்வோடு இணைந்த ஒன்றாக இருக்கிறது. நாமும் கூட, நமது வாழ்க்கையில் கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றவர்கள். ஆனால், அந்த நன்றியுணர்வு சிறிது கூட இல்லாமல், கடவுளுக்கு எதிராக நாம் தவறு செய்கிறோம். மீண்டும் மீண்டுமாக அதே தவறைச் செய்து கொண்டிருக்கிறோம்.

இன்றைய நற்செய்தியில், கடவுள் எந்த அளவுக்கு நம்மீது மனமிரங்குகிறவராக இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். தன்னுடைய நண்பர் இலாசர் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டவுடன், அதிலும் குறிப்பாக இலாசர் இல்லாமல் அவருடைய உடன்பிறந்த சகோதரிகளின் வேதனையை முற்றிலுமாக உணர்ந்து, அதனை தன்னுடைய அழுகையின் மூலமாக வெளிப்படுத்துகிறவராக இயேசு இருக்கிறார். அந்த சகோதரிகளின் மீது தன்னுடைய அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறவராக அவர் தன்னைக் காட்டிக்கொள்கிறார். எங்கெல்லாம் இரக்கம் தேவைப்படுகிறதோ, கடவுளின் அன்பு தேவைப்படுகிறதோ அங்கெல்லாம், இயேசு கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்.

நமது வாழ்வில் நாம் எப்போதும், கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் முழுமையாக உணர்ந்து கொள்வோம். நாம் செய்கிற குற்றங்களை கடவுள் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. அவர் நம் மீது அன்பு காட்டத்தான் ஏங்கிக்கொண்டிருக்கிறார். அந்த அன்பிற்கு நாம் உண்மையுள்ளவர்களாக வாழ முயற்சி எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.