ஆண்டவரின் திருவுளப்படியே அனைத்தும் படைக்கப்பட்டன.தி.வெ 4:11

எங்கள் ஆண்டவரே,எங்கள் கடவுளே, மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர்; ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே. உமது திருவுளப்படி அவை உண்டாயின, படைக்கப்பட்டன என்று திருவெளிப்பாடு 4 : 11 ல் படிக்கிறோம். ஆம் அவரது விருப்பப்படி தான் உலகத்தை படைத்து நம்மிடம் கொடுத்து அவற்றை ஆண்டுக்கொள்ளும் படி செய்தார். ஆனால் நாமோ அதை சாத்தானுக்கு கொடுத்துவிட்டு இப்போது பயந்து,பயந்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

விண்ணையும், மண்ணையும் உருவாக்கியவர் அவரே, விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கினார் என்று திருப்பாடல்கள் 115 : 16 ல் படிக்கிறோம். இந்த பூமி நமக்குரியது. அவரின் திருவுளப்படி நடந்தால் நாமும் இந்த பூமியை சொந்தமாக்கிக் கொள்ளலாம். அப்போது மானிடர், உண்மையிலேயே நேர்மையாளருக்குக் கைம்மாறு உண்டு; மெய்யாகவே பூவுலகில் நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று சொல்வார்கள்.

மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டாலும் ஆண்டவரின் சித்தம் அறிந்து செயல்பட்டால் நம்மை ஆசீர்வதித்து காத்தருள்வார். அவரால் படைக்கப்பட்ட நாம் எல்லோரும் சந்தோஷமாக , சமாதானமாக வாழ வேண்டும் என்றே கடவுள் விரும்புகிறார். அவரின் கட்டளைகளை ஏற்று அவரையே நம்பி வாழ்வோருக்கு இழப்பு என்பதே இல்லை. தீங்கு எதுவும் நேரிடாதபடிக்கு விடுவிக்க வல்லவரும்,நல்லவருமாகவே இருக்கிறார்.

சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் கடவுள் நம்மோடு இருந்து எத்தீங்கும் அணுகாமல் காத்திடுவார். நம்முடைய வாழ்நாள் எல்லாம் ஆண்டவரின் அருளைப் பெற்று நலமுடன் வாழ கிருபை அளித்திடுவார். அவரின் திருவுளப்படி படைக்கப்பட்ட நம்மிடம் கடவுள் விரும்புவது என்னவென்றால் திருவெளிப்பாடு 2 : 4 ல் வாசிக்கிறோம், ஆனால்,உன்னிடம் நான் காணும் குறையாதெனில்,முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை. ஆகையால்,நீ எந்நிலையில் இருந்து தவறி விழுந்து விட்டாய் என்பதை நினைத்துப்பார்; மனம்மாறு; முதலில் நீ செய்து வந்தச் செயல்களை இப்பொழுதும் செய். நீ மனம் மாறத் தவறினால் நான் உன்னிடம் வந்து நீ இருக்கும் இடத்தில் இருந்து அகற்றிவிடுவேன் ஆகையால் அவரால் அவருக்கென்று படைக்கப்பட்ட நாம் எல்லோரும் அவரின் திருவுளப்படியே நடந்து அவர் ஒருவருக்கே மகிமையை உண்டாக்குவோம்.கீழ்படிவோம்.முழு மனதோடு அன்புக் கூறுவோம்.

படைப்பின் இறைவா!!

உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், வல்லமையும், மகத்துவவும் நிறைந்த ஒரே கடவுள் நீர் ஒருவரே! நீரே விண்ணையும், மண்ணையும் உண்டாக்கிய கடவுள் என்பதை நாங்கள் அறிந்துக்கொள்ள நீர் பாராட்டின உதவிக்காக உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம். ஒவ்வொரு நாளும் எங்களை எல்லாப் பாவத்துக்கும் விலக்கி காத்து வழிநடத்தும். நாங்கள் வலப்பக்கம், இடப்பக்கம், சாயும் பொழுது வழி இதுவே என்று சொல்லும் உமது சத்தத்தைக் கேட்டு அதன்படியே நீர் காட்டும் வழியில் நடந்து செல்ல உதவியருளும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கெஞ்சி வேண்டுகிறோம், எங்கள் ஜீவனுள்ள தந்தையே !!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.