ஆண்டவரே உமது பெயர் எவ்வளவு பெயர் மேன்மையாய் விளங்குகின்றது

திருப்பாடல் 8: 1a, 4, 5 – 6, 7 – 8
”ஆண்டவரே உமது பெயர் எவ்வளவு பெயர் மேன்மையாய் விளங்குகின்றது”

கடவுளைப்பற்றியும், அவரது படைப்பின் மேன்மையைப் பற்றியும் உள்ளத்தில் ஆழமாக சிந்தித்த ஒரு மனிதரின் கூக்குரல் தான், இந்த திருப்பாடல். கடவுள் எந்த அளவுக்கு மாட்சிமையும், வல்லமையும் உடையவராய் இருக்கிறார் என்பதை, நாம் அவரைப்பற்றி சிந்தித்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். வெறுமனே படைப்புக்களை மேலோட்டமாக பார்த்தால், கடவுளின் மாட்சிமையை நாம் புரிந்து கொள்ள முடியாது. நேர்த்தியாகப் படைக்கப்பட்ட பறவையினங்கள், விலங்குகள், மரங்கள், அவைகளுக்கு உணவு வழங்கும் விதம், என்று ஒவ்வொன்றையும் நாம் இரசிக்கிறபோது, அதன் அழகைப் பருகுகிறபோது, கடவுளின் மேன்மையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

கடவுளின் ஞானம் மனிதர்களோடு ஒப்பிடப்பட முடியாத ஒன்று. ஒவ்வொன்றையும் அவர் செதுக்கி வைத்திருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் ஒரு வடிவம் தந்திருக்கிறார். அது இயல்பாகவே இயங்குவதற்கு ஆற்றல் வழங்கியிருக்கிறார். படைப்புக்களையும், அவற்றின் மேன்மையையும் பேசுகின்ற திருப்பாடல் ஆசிரியர், படைப்பின் சிகரமாக இருக்கக்கூடிய மனிதர்களின் பெருமைகளையும் எடுத்துரைக்கின்றார். மனிதர்கள் கடவுளின் படைப்பாக இருந்தாலும், மற்ற படைப்புகளுக்கெல்லாம் மேலானவர்களாக அவர்களைப் படைத்துள்ளார். கடவுளுக்கு சற்றே சிறியவர்களாக படைக்கும் அளவுக்கு, அவர்கள் மேல் கடவுள் மிகுதியாக அன்பு கொண்டுள்ளார். அவர்களுக்கு பல அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் கொடுத்து, அவர்களை உயர்த்தியிருக்கிறார். இவ்வளவுக்கு கடவுளின் அன்பிற்கு பாத்திரமாக இருக்கிற நாம், கடவுளுக்கு பிரமாணிக்கமாக இருக்க வேண்டும்.

கடவுள் நமக்கு தந்திருக்கிற இவ்வளவு பெருமைகளையும், நாம் உணர்ந்து அதற்கேற்ப நாம் எப்போதும், கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக வாழ முயற்சி எடுக்க வேண்டும். கடவுளுக்கு கீழ்ப்படிந்து பிரமாணிக்கமுள்ளவர்களாக நாம் வாழ, எந்நாளும் உறுதி எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.