ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்

இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்கள் ஒவ்வொரு விதத்தில், ஒவ்வொரு இடத்தில் அடைக்கலம் புகுகிறார்கள். ஒருசிலர், புகழுக்கு மயங்கி, புகழிடத்தில் அடைக்கலம் புகுகிறார்கள். ஒரு சிலர், வாழ்க்கை முழுவதும் செல்வம் சேர்க்க வேண்டும், செல்வம் தான் வாழ்க்கை என செல்வத்திடம் தங்களையே கையளிக்கிறார்கள். ஒரு சிலா் அதிகாரம் தான் எல்லாமே, என்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தங்களது வாழ்க்கையை செலவழிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே எப்போதும் நிறைவைக் காணப்போவதில்லை. புகழும், பணமும், அதிகாரமும் எவருக்கும் நிறைவைத் தந்ததில்லை. நிம்மதியின்மையைத்தான் கொடுத்திருக்கின்றன. கடவுளிடம் நாம் அடைக்கலம் புகுவதுதான், நமக்கு நிறைவையும், மகிழ்வையும் தரும் என்று, திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

கடளிடம் தஞ்சம் கொள்வதே நமக்கு நலம் என்பது திருப்பாடல் ஆசிரியரின் கருத்து மற்றும் வாழ்க்கைப்பாடம். கடவுளிடம் ஏன் நாம் அடைக்கலம் புக வேண்டும்? ஏனென்றால், கடவுள் தான் நமக்கு எல்லாமுமாக இருக்கிறார். கடவுள் தான் நம்மைப்படைத்தவர். கடவுள் தான், நமக்கு வழிகாட்டியாக இருக்கிறவர். நமக்கு வாழ்க்கைநெறிகளை வகுத்துத்தருகிறவர். நாம் மகிழ்வோடு, மனநிறைவோடு வாழ வேண்டும என்று நினைக்கக்கூடியவர் கடவுள் ஒருவர் தான். எனவே தான், மனிதர்கள் எவ்வளவு தான் தவறுகள் செய்தாலும், அவர்களை மன்னித்து, அவர்களுக்கு மீட்பைப் பெற்றுத்தருவதில் கடவுள் அதிக அக்கறை காட்டுகிறார். அவர்களை சரியான பாதைக்கு வழிநடத்துவதில் அக்கறை கொள்கிறார்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் கடவுளிடம் தஞ்சம் புகுந்தால், நாம் செல்ல வேண்டிய பாதைகளை கடவுள் வகுத்துத்தருவார். நாம் செல்கிற பாதை சவால்கள் நிறைந்திருந்தாலும், அவர் நம்மை பாதுகாப்பாய் வழிநடத்துவார். எனவே, மனிதர்களாகிய நாம் ஆண்டவரிடத்தில் நம்மை முழுமையாக ஒப்படைப்போம். ஒப்புக்கொடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.