ஆண்டவரே! உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை. [ தி.பா. 9 : 10]

அன்பானவர்களே! நாம் வானத்தையும், அதில் ஆண்டவர் பொருத்தியுள்ள நிலாவையும், விண்மீன்களையும் பார்க்கும் பொழுது அவரின் வல்லமை எத்துனை அதிகமாய் விளங்குகிறது. இவ்வளவு வல்லமை உள்ள ஆண்டவர் மனிதர்களாகிய நம்மை எண்ணுவதற்கு நாம் ஒரு பொருட்டல்ல. ஆனாலும் நம் ஆண்டவர் இரக்கமே உள்ளவர் என்பதால் அவரை நாடி வருவோரை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. அவரை நோக்கி பார்த்து வெட்கப்பட்டு போனவர்கள் ஒருவரும் இல்லை.

அவர் நீதியுள்ள நடுவராக அரியணையில் அமர்ந்து நம்முடைய காரியங்கள் யாவையும் கண்ணோக்கி கொண்டு உள்ளார். இந்த உலகிற்கே நீதியான தீர்ப்பு வழங்கும் அவர் அவரை நாடுவோரை கைவிடுவாரா என்ன? ஒடுக்கப்படும் ஒவ்வொருவருக்கும் ஆண்டவரே அடைக்கலம்.
நம்முடைய நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே!! அவரது பெயரை அறிந்து அவரில் நம்பிக்கை கொள்வோர் அவர் அளிக்கும் ஆசீரை பெற்று மகிழ்வர்.

நம்முடைய வாழ்நாள் முழுதும் எந்த மனிதனும் எதிர்த்து நிற்க மாட்டான். அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை. நாம் அவருடைய வேதத்தை ஆராய்ந்து பார்ப்போமானால் இரவும், பகலும் அவரை தியானம் செய்து அவர் வார்த்தைகளை கடைப்பிடிக்கும் பொழுது நம்முடைய ஒவ்வொரு தேவைகளையும், அவர் பொறுப்பெடுத்துக்கொண்டு நமக்கு உற்ற துணையாக இருந்து நாம் போகும் இடமெங்கும் கூடவே இருந்து ஒரு தீமையும் தொடாதபடிக்கு காத்து மறைத்து பாதுக்காத்து கொள்வார்.

அன்பின் ஆண்டவரே!

உம்மை போற்றி துதிக்கிறோம். உம்மிடத்தில் வருபவர்களை நீர் ஒருபோதும் கைவிடாத தேவன்.
எங்கள் மேல் வைத்த உமது பேரன்பு பெரியது.  எங்கள் குற்றம் குறைகளை பார்க்காமல் எங்கள் மேல் இரக்கமாக இருந்து ஆசீர்வதித்து அரவணைத்து வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்து
வின் இன்ப நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல பிதாவே!!

ஆமென்! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.