ஆண்டவரே என் ஆதரவு

திருப்பாடல் 3: 1 – 2, 3 – 4, 5 – 7ஆ

இந்த உலகம் தீமைகள் நிறைந்த உலகம். இங்கே விழுமியங்களுக்கும், நல்ல மதிப்பீடுகளுக்கும் மதிப்பில்லை. நல்லவர்கள் மதிக்கப்படுவதில்லை. கெட்டவர்களுக்குத்தான் வாழ்வு இருக்கிறது. அவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் வாழ முடியும் என்கிற தோற்றமும் இருக்கிறது. இத்தகைய உலகத்தில் நல்லவர்கள் வாழ முடியுமா? இந்த உலகத்தை எதிர்த்து அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க முடியுமா? எதிர்ப்புக்களுக்கு நடுவில் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா? முடியும் என்பதை இந்த திருப்பாடல் நமக்கு எடுத்துரைக்கிறது.

”என் எதிரிகள் பெருகிவிட்டனர்” என்கிற வார்த்தை, நல்ல மதிப்பீடுகளுக்காக திருப்பாடல் ஆசிரியர் துணிந்து நிற்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. திருப்பாடல் ஆசிரியர் விழுமியங்களுக்கு குரல் கொடுக்கிறவராக இருக்கிறார். அதனால் அவருக்கு பல எதிரிகள் வந்துவிட்டனர். அவர்களை எதிர்த்து நிற்பது எளிதல்ல. ஆனாலும், கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும், உற்சாகத்தையும் தருகிறது. கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை தான், அவருக்கு உந்துசக்தியாக இருக்கிறது. ஆக, ஒரு மனிதனால் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும், மதிப்பீடுகளுக்காக குரல் கொடுக்க முடியும். எப்போது என்றால், அவன் கடவுளை தன்னுடைய ஆதரவாக கொண்டிருக்கிறபோது என்பது இங்கு புலனாகிறது.

நம்முடைய வாழ்வில் கடவுள் நமக்கு துணைநிற்கிற அளவு நம்முடைய வாழ்க்கை அமைய வேண்டும். கடவுள் எப்போதும் நமக்காக, நம் சார்பாக இருக்கிறார். நாம் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும். உண்மையாக நாம் வாழ வேண்டும். அப்படிப்பட்ட நல்ல வாழ்வை வாழ, நாம் இயேசுவிடம் மன்றாடுவோம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.