ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக

திருப்பாடல் 105: 2 – 3, 36 – 37, 42 – 43

இந்த பாடல் எகிப்தில் இறைவன் செய்த ஆச்சரியங்களை மீண்டும் நினைவுபடுத்துகிற பாடல். எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக இருந்தபோது, அவர்கள் பட்ட துன்பங்கள் மக்களின் அழுகுரல் வழியாக கடவுளைச் சென்று அடைந்தது. மக்கள் கடவுளைத் தேடினார்கள். தங்களை அவருடைய சொந்த இனமாக தேர்ந்து கொண்ட கடவுள் எங்கே? என்று தேட ஆரம்பித்தார்கள். அவர்களின் தேடல் கடவுளை, அவருடைய வல்லமையை அவர்களுக்குக் காட்டியது. அவர்கள் கடவுளின் வல்லமையை உணர ஆரம்பித்தார்கள்.

கடவுளை நாம் தேடுகிறபோது, நம்முடைய உள்ளம் மகிழ்ச்சியடைகிறவிதத்தில் கடவுள் செயல்படுகிறார். மீட்பின் வரலாற்றை நாம் புரட்டிப்பார்க்கிறபோது, யாரெல்லாம் துன்பங்களில் கடவுளின் துணையை நாடினார்களோ, அவர்கள் அனைவருமே கடவுளின் அளப்பரிய வல்லமையைப் பெற்று மகிழ்ச்சியடைந்தார்கள். பாவங்களைச் செய்தபோது அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொண்ட இஸ்ரயேல் மக்கள், கடவுளைத் தேடியபோது, அதற்கான பலனையும் மகிழ்ச்சியாக அவர்கள் அனுபவித்தார்கள்.

நம்முடைய வாழ்விலும் நாம் கடவுளை எப்போதும் தேடுகிறவர்களாக வாழ்வோம். கடவுள் நமக்கு உடனிருந்து நம்மை வழிநடத்துவார். நமக்குள்ளிருந்து செயலாற்றுவார். கடவுளை நாம் முழுமையாகப் பற்றிக்கொண்டு, அவர் நமக்கு காட்டுகிற பாதையில் பயணிப்போம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.