ஆண்டவரைத் தேடுவோர் கண்டடைவர்

கேளுங்கள்,உங்களுக்கு கொடுக்கப்படும்;தேடுங்கள்,கண்டடைவீர்கள்.தட்டுங்கள்,உங்களுக்கு திறக்கப்படும்.ஏனெனில் கேட்போர் எல்லோரும் பெற்றுக்கொள்கின்றனர்.தேடுவோர் கண்டடைகின்றனர்.தட்டுவோருக்கு திறக்கப்படும்.உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தை கேட்கும் உங்கள் பிள்ளைக்கு கல்லை கொடுப்பீர்களா? அல்லது அந்தப்பிள்ளை மீன் வேண்டும் என்று கேட்டால் அதற்கு பதிலாக பாம்பை கொடுப்போமா?நாமே நம்முடைய பிள்ளைகளுக்கு அவர்கள் கேட்பதை கொடுக்கும் பொழுது விண்ணையும்,மண்ணையும் உண்டாக்கிய கடவுள் நாம் கேட்கும் பொழுது கொடுக்காமல் இருப்பாரா?நிச்சயம் கொடுப்பார்.நாம் கேட்க வேண்டிய முறையில் கேட்டால் நமக்கு இல்லை என்று சொல்லவே மாட்டார்.

யோவான் 14 : 13 ,14, ஆகிய வசனங்களில் நாம் வாசிப்பது என்ன?நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்.நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்,என்று சொல்கிறார். நாம் மறந்தாலும் நம்மை ஒருபோதும் மறக்காத இயேசு நாம் கேட்பதை கொடுத்து ஆசீர்வதிப்பார்.அதற்கு நாம் அவரைத் தேடவேண்டும். எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன்.என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டு பிடிப்பார்கள் என்றும் எழுதியிருக்கிறது.

ஆண்டவரிடமே செல்வமும்,மென்மையும்,அழியாப் பொருளும் அனைத்து நலமும் உண்டு.அவரைக் கண்டு கொண்டவர்கள் பெறும் பயனானது பொன்னை விடச் சிறந்தது.அவரை அடைந்தவர்களுக்கு கிடைக்கும் விளைச்சல் தூய வெள்ளியைவிட மேலானது.அவர்மீது நாம் உண்மையிலயே அவர்மேல் அன்புக்கூர்ந்தால் நமக்கு வேண்டிய செல்வத்தை வாரி வழங்குவார்,நம்முடைய களஞ்சியங்கள் நிரம்பி வழியும்படி செய்வார்.தினமும் அவரின் வார்த்தைகளை வாசித்து தியானித்து அன்றன்று உள்ள தேவைகளை கேட்டு பெற்றுக்கொள்வோம்.முதலாவது அவருடைய ராஜ்ஜியத்தை தேடுவோம்.அப்பொழுது இந்த உலகில் நமக்கு தேவையான யாவற்றையும் சேர்த்தே கொடுப்பார்.

அன்புள்ள ஆண்டவரே!!

உம்மை போற்றுகிறோம்,புகழ்கிறோம்,வாழ்த்துகிறோம்.நீர் எத்துனை இனிமையான தெய்வம்.உம்மை உண்மையோடும் அன்போடும் தேடும்பொழுது நீர் எங்களுக்கு உமது முகத்தை மறைக்காமல் எங்களுக்கு நிழலாய் தோன்றுகிறீர்.முழுமனத்தோடும்,ஆர்வ மிக்க உள்ளத்தோடும் உம்மை தேட அருள் பொழிந்தருளும்.எங்கள் எல்லாத் திட்டங்களையும்,எண்ணங்களையும் பகுத்தறிகிற தேவன் நீரே .உமக்கு மறைவான காரியம் ஒன்றுமே இல்லை.உம்மைத் தேடி கண்டுக்கொள்ள உதவி செய்தருளும்.துதி,கனம்,மகிமை யாவும் உம் ஒருவருக்கே உண்டாகட்டும்.கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் பரம தந்தையே!!

ஆமென்!அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.