ஆண்டவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக

திருப்பாடல் 104: 1 – 2, 5 – 6, 10 – 12, 24, 35

ஆண்டவர் எதற்காக தன்னுடைய செயல்களைக் குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும்? எத்தகைய செயல்களைக் குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். ஆண்டவர் இந்த உலகத்தைப் படைத்தவர். இந்த உலகத்தைப் படைத்து பராமரித்தவர். தன்னுடைய சாயலில் மனிதர்களைப் படைத்து, அவர்கள் பலுகிப்பெருகி இந்த உலகத்தை நிரப்ப வேண்டும் என்று பணித்தவர். இந்த உலகம் உண்மையில் அதிசயமானது. தொடக்கநூலின் முதல் அதிகாரத்தில் கடவுளின் படைப்பை நாம் வாசிக்கிறோம். கடவுளின் படைப்பு அந்த அளவுக்கு மகிமை நிறைந்ததாக இருக்கிறது. அந்த செயல்களைக்கண்டு கடவுள் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.

கடவுளின் ஞானம் மகத்துவமானது. அதனை மனிதர்களாக இருக்கிற நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், கடவுள் அனைத்தையும் தன்னுடைய ஞானத்திலே படைத்திருக்கிறார். தீயவர்கள் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்று கடவுள் அவர்களை அழித்து ஒழிக்கவில்லை. மாறாக, அவர்கள் மனந்திருந்தி வாழ, அவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றார். அந்த அளவுக்கு கடவுள் அவர்கள் மீது இரக்கம் கொண்டிருக்கிறவராக அறியப்படுகிறார். தான் இந்த மக்கள் மீது வைத்திருக்கிற இரக்கத்தை நினைத்தும் கடவுள் நிச்சயம் மகிழ்ச்சியடைவார் என்று, ஆசிரியர் நினைக்கிறார்.

நம்மீது முழுமையான அன்பையும், இரக்கத்தையும் வைத்திருக்கிற ஆண்டவர்மட்டில் நாமும் மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனென்றால், இவ்வளவுக்கு அற்புதமான உலகத்தை நமக்குக் கொடுத்து, நம்மை ஆளச்செய்து, நம்மை மன்னிக்கக்கூடியவராக இறைவன் இருக்கிறார். அந்த அன்பை நாம் முழுமையாக சுவைப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.