ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்

திருப்பாடல் 149: 1b – 2, 3 – 4, 5 – 6a & 9
இந்த திருப்பாடல் ஒரு புகழ்ச்சிப்பாடல். இஸ்ரயேலின் கடவுளை ஆர்ப்பரிப்போடு வாழ்த்துகிற பாடல். போர்க்களத்தில் எதிரிநாட்டினரை அடிபணியச் செய்து தன்னுடைய வல்லமையை நிலைநாட்டிய யாவே இறைவனுக்கான பாராட்டுப்பாடல். இதனுடைய பிண்ணனி நிச்சயம் போர்க்களம். எதிரிநாட்டினருக்கு எதிராக, வெற்றியைப் பெற்றிருக்கிற தருணத்தில், தங்களது உள்ளக்கிடக்கைகளை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தியது தான் இந்த பாடல் என்று சொல்லலாம். அதிலும் சிறப்பாக சீயோனின் மீது தாவீது தன்னுடைய முழுமையான ஆளுமையை நிரூபித்த நேரத்தில் பாடப்பட்ட பாடலாகவும் நாம் கருதலாம். இஸ்ரயேல் மக்கள் எப்போதும் வாழ்க்கை நிகழ்வுகளோடு கடவுளைப் பொருத்திப் பார்த்தார்கள். தங்களுக்கு துன்பம் வந்தாலும் அது கடவுள் தான் அனுப்பியிருக்கிறார் என்று நினைத்து, அதற்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். அது போல வெற்றி வந்தாலும், தங்களுடைய பலத்தினால் அல்ல, மாறாக, யாவே இறைவனின் கொடையினால் தாங்கள் பெற்றது என்ற எண்ணம் அவர்களுக்கு எப்போதுமே இருந்தது.

கடவுள் எல்லோருக்குமான கடவுள். இந்த உலகம் எல்லோருக்குமானது. அப்படியிருக்கிறபோது, ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் கடவுள் ஏன் அதிகமாக அன்பு செய்ய வேண்டும்? குப்பைத் தொட்டியில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் குழந்தையை தத்தெடுப்பது அந்த குழந்தைக்கான சலுகை அல்ல. அந்த குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டிய அன்பைக் கிடைக்கச் செய்வது பாரபட்சம் அல்ல. அது நீதி. அதே வேளையில் அந்த குழந்தை தவறு செய்கிறபோது, ”ஐயோ, பாவம்!” என்று அதனை கண்டித்து திருத்தாதவர் அல்ல கடவுள். மற்றவர்களை விட, இஸ்ரயேல் மக்கள் தவறு செய்தபோது அதிகமாக தண்டிக்கப்பட்டார்கள். எங்கே பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறதோ, அங்கே எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கும். அந்த பொறுப்பில் தவறுகிறபோது, தண்டனையும் அதிகமாக இருக்கும். அது தான், இஸ்ரயேல் மக்கள் வாழ்விலும் நடக்கிறது.

நம்முடைய வாழ்விலும் கடவுள் நமக்கு பல கொடைகளைத் தந்திருக்கிறார் என்றால், நம்மை அவருடைய பிள்ளைகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால், அது உரிமை மட்டுமல்ல, மிகப்பெரிய பொறுப்பும் கூட. அந்த பொறுப்பை நிறைவோடு செய்வதற்கு நாம் முயல வேண்டும். அதனை நிறைவோடு செய்ய வேண்டும். அதனை இறைவனிடம் வேண்டுவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.