ஆண்டவர் நம் பாதைகளை செம்மையாக்குவார். நீதிமொழிகள் 3:6

அன்பும்,பாசமும் நிறைந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த உலகில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் அநேக விருப்பங்களும் ஆசைகளும், தேவைகளும் உண்டு. இவைகள் ஒவ்வொன்றும் நமக்கு தேவையானது என்று நம்மை உருவாக்கிய ஆண்டவர் அறிந்து வைத்துள்ளார். ஏனெனில் நாம் அவருடைய உரிமைச் சொத்தும், அவருடைய மந்தையின் ஆடுகளாய் இருக்கிறோம். ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை புல்லுள்ள இடங்களில் தான் மேய்ப்பான். அவனுக்கு தமது ஆட்டின் பசியை எவ்வாறு போக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவனாயும் இருப்பான். ஒரு மனிதனே இவ்வாறு தமது ஆடுகளை மேய்க்கும் பொழுது நம் ஆண்டவர் நமது ஒவ்வொரு தேவைகளையும் காண்பவர். அதை நமக்கு தருபவர் என்பதில் என்ன சந்தேகம்? நிச்சயம் தருவார். நமக்காக தமது உயிரையே கொடுத்தவர் மீதியானவற்றையும் தர காத்திருக்கிறார்.

நாம் இருளில் குடியிருந்தாலும் நமக்கு ஒளியை தருபவர் அவரே. நாம் அவருக்கு எதிராக பாவம் செய்யும்பொழுது நம் பாவத்தின் நிமித்தம் நம்மேல் கோபம் கொண்டாலும்,அவருடைய அன்பின் நிமித்தம் தமது கோபத்தை நம்மேல் இருந்து நீக்கி நம்மை மன்னித்து அவருடைய நீதியாலும்,நியாத்தினாலும்,கிருபையாலும் நமக்கு மனமிரங்கி நமது பாதையை செம்மையாக்குவார். நம்மீது இரக்கம் வைத்து நம் தீச்செயல்களை மிதித்து,நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ் கடலில் எறிந்து விடுவார். அப்பொழுது நம்மீது பகைமை கொண்டவர்களும் அதைக்கண்டு வெட்கம் அடையும்படி செய்வார்.

அன்பானவர்களே!நாமும் அவர் விரும்பும் காரியத்தை செய்து நேர்மையோடும்,  ஒருவருக்கொருவர் இரக்கத்தோடும், கருணையோடும், அன்போடும் வாழ்ந்து அவர் காட்டிய பாதையில் செல்வோம். கைம்பெண்ணுக்கோ, அனாதைக்கோ, அன்னியர்களுக்கோ, ஏழைகளுக்கோ எந்த தீங்கும் செய்யாமல், அவர்களை ஒடுக்காமல் மனதளவில் கூட அவர்களுக்கு விரோதமாய் எந்த ஒரு நினைவையும் நினையாமல் நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்யும்பொழுது நாம் அவரின் சாயலாய் மாறுவோம். அப்பொழுது ஆண்டவர் நம்மீது இரங்கி நமது பாதைகளை செவ்வைப்படுத்தி நாம் விரும்பும் அனைத்து காரியங்களையும் நமக்கு தந்து நம்மை உயர்த்துவார். நாம் கூப்பிடும் முன்னே நமக்கு செவி கொடுத்து நம் இருதயத்தின் நினைவுகளை நிறைவேற்றுவார். ஆண்டவரின் மனவிருப்பத்தை அறிந்து அதன்படியே நடந்து அவருக்கே மகிமை உண்டாக வாழ்ந்து இந்த தவக்காலத்தில் பிறரோடு உண்மையாய் நடந்து சத்தியத்தையும், சமாதானத்தையும்,காத்துக்கொள்வோம்.

ஜெபம்

அன்பின் இறைவா! இதோ உமது கரத்தில் நாங்கள் ஆடுகளைப்போல் உள்ளோம். நீர் எங்கள் பாதைகளை செவ்வைப்படுத்தி, எங்களை புல்லுள்ள இடங்களில் மேய்த்து நாங்கள் தாழ்ச்சி அடையாமல் பாதுக்காத்துக்கொள்ளும். எங்கள் தேவைகள் யாவையும் அறிந்திருக்கிற ஆண்டவர் நீரே. உம்மை போற்றுகிறோம், உமக்கு மகிமை செலுத்துகிறோம். உமக்கு பயந்து, கீழ்படிந்து வாழ்ந்து உமது சித்தத்தை செய்ய ஒவ்வொரு நாளும் கற்றுத்தாரும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் பரம தந்தையே! ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.