”ஆண்டவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்”

இஸ்ரயேல் மக்கள் உலகத்தை மூன்றாகப் பிரித்துப் பார்த்தார்கள். விண்ணகம், மண்ணகம், பாதாளம் என்று வகைப்படுத்தினார்கள். கடவுள் விண்ணகத்தில் இருப்பதாகவும், அங்கிருந்து அவர் மக்களை வழிநடத்துவதாகவும் நம்பினர். எப்போதெல்லாம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் கடவுள் அவர்களை விடுவிக்க அவர் எல்லாவித முயற்சிகளையும் எடுப்பார் என்கிற நம்பிக்கை, இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இருந்தது. அந்த நம்பிக்கையின் பிண்ணனியில் தான் இந்த திருப்பாடல் (திருப்பாடல் 102: 10 – 11, 12 – 13, 14 – 15 ) எழுதப்படுகிறது.

இஸ்ரயேல் மக்கள் மட்டும் இந்த உலகத்தில் வாழவில்லை. அவர்களோடு இன்னும் பல நாட்டினரும், இந்த உலகத்தில் வாழ்ந்தார்கள். ஒருவர் மற்றவரை அடிமைப்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் அவர்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. எனவே, ஒருவர் மற்றவருக்கெதிராக போர்தொடுத்தனர். பொருட்சேதங்களை வேற்றுநாட்டினர் ஏற்படுத்தினர். இஸ்ரயேல் மக்களின் நிலையோ மிகப்பரிதாபமானதாக இருந்தது. அவர்களுக்கு என்று எந்த ஆதரவும் இல்லை, கடவுள் ஒருவரைத்தவிர. எனவே தான், திருப்பாடல் ஆசிரியர் கடவுள் எப்போதும், வானகத்திலிருந்து, இஸ்ரயேல் மக்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று நம்பினர். கடவுளின் பராமரிப்பில் அவர்கள் முழுமையாக இருப்பதாக அவர்கள் உணா்ந்தனர். அதுனுடைய நிறைவு தான், விண்ணகத்திலிருந்து, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்த நிகழ்ச்சி. இவ்வாறு, கடவுள் எப்போதும் இந்த உலகத்தின் மீது, அதிகமான பாசம் வைத்திருக்கிறார் என்பது, தெளிவாகிறது.

கடவுள் நம்மீது வைத்திருக்கிற அன்பை நாம் எப்போது உணரப்போகிறோம்? கடவுளின் அன்புக்கு ஏற்ப, நாம் அந்த அன்பை அவருக்கு திருப்பிக்கொடுக்கப் போகிறோமா? அந்த அன்பை நாமும் பெற்று, மற்றவர்களுக்கும், குறிப்பாக, அன்பு என்றால் என்னவென்று அறியாத உள்ளங்களுக்கு, அன்னைதெரசாவைப் போல வெளிப்படுத்தப்போகிறோமா? சிந்திப்போம், செயல்படுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.