ஆவலோடு எதிர்பார்த்தது இதோ விரைவில்…

லூக்கா 21:20-28

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

நாம் ஆவலோடு எதிர்பார்த்திருந்தது கிடைக்கும் போது நமக்கு பெருமகிழ்ச்சி கிட்டுகிறது. நாம் எதிர்பார்த்திருந்தன் நோக்கமும் நிறைவு பெறுகிறது. நமது மனதின் ஏக்கமும் முடிவுக்கு வருகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவார் என எதிர்பார்த்திருக்கும் நமக்கு மிக உடனடியாக அவரது இரண்டாம் வருகை இருக்கும், நம் ஏக்கம் நிறைவேற போகிறது என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் இரண்டாம் வருகை நமக்கு இரண்டு ஆசீரைத் தருகிறது.

1. மீட்பு
இயேசுவின் இரண்டாம் வருகையை நம்பியிருக்கும் எல்லோருக்கும் இயேசுவின் வருகை மீட்பு அளிக்கும். அந்த மீட்பிற்கான நாள் வெகுதொலையில் இல்லை. மாறாக மிகவும் அருகில் உள்ளது. நாம் அனைவரும் மெசியாவைப் பார்க்க போகின்றோம். அவரிடமிருந்து மீட்பை, முழுமையான மீட்பை பெற போகின்றோம். எல்லா வகையான அடிமைத்தளையிலிருந்தும் அவர் மீட்பு வழங்குவார்.

2. உயிர்ப்பு
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தது போன்று நாமும் உயிர்த்தெழுகிறோம். விண்ணக மாட்சியில் அவரோடு இருக்கிறோம். இயேசுவின் இரண்டாம் வருகையால் உயிர்ப்பு அனைவருக்கும் உறுதி செய்யப்படும். நல்லவர், தீயவர் என அனைவருக்கும் உயிர்ப்பு உறுதி செய்யப்படும்.

மனதில் கேட்க…
1. நான் மீட்பு பெற நான் செய்துக்கொண்டிருக்கும் நற்செயல்கள் என்னென்ன?
2. இயேசுவின் இரண்டாம் வருகை அண்மையில் உள்ளது இதை விசுவசிக்கிறேனா?

மனதில் பதிக்க…
தலைநிமிர்ந்து நில்லுங்கள். ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது (லூக் 21:28)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.