இன்று தேவையான உணவை எங்களுக்குத்தாரும்

இயேசு கற்றுக்கொடுத்த இந்த செபம், யூதர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கப்பட வேண்டும். உணவு என்பது வானக உணவைக்குறிப்பதாக நாம் அர்த்தம் கொள்ளலாம். ஏனெனில் லூக்கா 14: 15 ல் நாம் பார்க்கிறோம்: ”இறையாட்சி விருந்தில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இறையாட்சி பற்றி யூதர்களுக் விநோதமான ஒரு கருத்து இருந்தது. மெசியாவின் ஆட்சி வருகிறபோது, மெசியாவின் விருந்து நடைபெறும். அந்த விருந்தில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற அனைவரும் கலந்து கொள்வர். அத்தகைய விருந்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பமாக, இது பார்க்கப்படுகிறது.

கடவுள் நமது உடலை பேணி வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறார் என்பதை இது நமக்கு தெளிவாக்குகிறது. ஏனென்றால், மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்க மணிக்கணக்காக தங்கியிருந்தபோது, அவர்களுக்கான உணவைப்பற்றி இயேசு கவலைப்படுவதை நாம் நற்செய்தியில் பார்க்கிறோம். உணவால் நாம் மடிந்து விடக்கூடாது என்பதற்காக, அங்கிருந்த மக்களுக்கு உணவு கொடுக்கிறார். மக்கள் ஆரோக்யமான வாழ்வு வாழ்வதற்கு, ஆரோக்யமான உணவும் தேவை என்பதை இயேசு அறியாதவரல்ல.

நமது உடலை புனிதமாக, கண்ணும் கருத்துமாக பேணிவளர்க்கின்ற போதுதான், நமது ஆன்மாவையும் நாம் நல்லமுறையில் வளர்க்க முடியும். நமது செபவாழ்வில் நாம் ஆரோக்யமாக வளர, நமது உடல் ஆரோக்யத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். நமது உடலைப்பேணி வளர்ப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.