இயேசுவின் இதயத்தில் இடம் பிடியுங்கள்…

லூக்கா 7:1-10

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

நாம் கடவுளின் செல்லப்பிள்ளைகளாக வாழ வேண்டும், அவருக்கு உகந்தததைச் செய்ய வேண்டும், மிகவும் குறிப்பாக அவரின் இதயத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு எப்போதும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த ஆசை, ஆவல் அனைத்தும் இந்த அருமையான நாளில் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நிறைவுக்கு வருகிறது. என்ன செய்தால் அந்த ஆசைகள் நமக்கு நிறைவுபெறும்?

1. நூறு சதவிகித நம்பிக்கை
இன்றைய நற்செய்தியில் வருகின்ற நூற்றுவர் தலைவர் என்றாலே நூறு சதவிகித நம்பிக்கை கொண்டவர் என நாம் சொல்லி விடலாம். இயேசுவின் மீது ஆழமான, அடர்த்தியான, அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அதுதான் இயேசுவின் இதயத்தில் அவருக்கு இன்றியமையாத இடத்தைக் கொடுத்தது.

2. நூறு சதவிகித தாழ்ச்சி
தாழ்ச்சிக்கு பெயர் போனவர் நூற்றுவர் தலைவர் தான். எந்த அளவுக்கு தன்னை தாழ்த்துகிறார் பாருங்கள். கடவுள் முன் தான் தூசிக்கும் சாம்பலுக்கும் மதிக்கத்தக்கவன் என்று ஆபிரகாம் தன்னை தாழ்த்திக் கொண்டாரே அதே போல மிகவே தன்னை தாழ்த்துகிறார். தாழ்த்தியவர் உயருகிறார் இயேசுவின் பார்வையில். உயர்ந்தவர் அவர் இதயத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கிறார்.

மனதில் கேட்க…
1. இயேசுவின் மீது நான் கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் சதவிகிதம் என்ன?
2. நூற்றுவர் தலைவர் கொண்டிருந்த தாழ்ச்சி எனக்கு மிகச் சிறந்த பாடம் தானே?

மனதில் பதிக்க…
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை (மத் 8:10)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.