இயேசுவின் சமுதாய சீர்திருத்தம்

ஒவ்வொரு யூதரும் ஆண்டிற்கு ஒருமுறை ஆலயவரி செலுத்த வேண்டும். அதற்கு செக்கேல் எனப்படும் நாணயத்தின் பாதி மதிப்பில், இந்த வரியைச் செலுத்த வேண்டும். இது ஒரு தொழிலாளியின் இரண்டு நாள் கூலிக்கு இணையானது. பாஸ்கா திருவிழா கொண்டாடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, இந்த காணிக்கையைப் பிரிப்பதற்காக, ஆங்காங்கே எல்லா நகர வீதிகளிலும், கிராமங்களிலும் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, வரிவசூலிக்கப்படும். பெரும்பாலும், யெருசலேமில் பாஸ்கா விழா கொண்டாட வரும் பயணிகள் தான், இதில் அதிக எண்ணிக்கையில் கொடுப்பார்கள்.

பாலஸ்தீனத்தில் அனைத்து வகையான நாணங்களும் புழக்கத்தில் இருந்தன. கிரேக்க நாணயம், உரோமை நாணயம், சிரிய நாணயம், தீர் நாணயம், எகிப்து நாணயம் என்று, பல நாணயங்கள் இருந்தன. அவைகளுக்கான சரியான மதிப்புகளும் சரியான விகிதத்தில் பாலஸ்தீனத்தில் கொடுக்கப்பட்டது. ஆனால், நாணயம் மாற்றுவோருக்கு ஆலயத்தில் என்ன வேலை என்று கேட்கத்தோன்றும்? யெருசலேம் ஆலயத்தில் செலுத்தப்படும், இந்த ஆலய வரி எல்லா நாட்டு நாணயத்திலும் கொடுக்க முடியாது. யெருசலேமில் மட்டும் புழக்கத்தில் இருக்கும், செக்கேல் என்னும் நாணயத்தில், சரியான மதிப்பில் தான் கொடுக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து யெருசலேமுக்கு திருயாத்திரிகையாக வரும் பயணிகளிடத்தில் இந்த செக்கேல் இருக்க வாய்ப்பில்லை. எனவே, தங்களின் பணத்தை, ஆலய வரி செலுத்துவதற்கு ஏற்ற செக்கேலாக மாற்ற வேண்டும். இங்கு தான், நாணயம் மாற்றுவோர், அவர்களின் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, அதிக இலாபத்தில், அவர்களை சுரண்டினர். இந்த சமூக அநீதியை, நேர்மையற்றத்தனத்தை, இயேசு கண்டிக்கிறார்.

குருக்கள் சமுதாயத்தில் நிலவும் தீமைகளைப் பார்த்து போராடலாமா? நமது கடமை ஆன்மீக கடமை மட்டும்தானே? அதை மட்டும் பார்த்தால் போதாதா? என்ற கேள்விகள் கேட்போரின் எண்ணிக்கை, இன்று பல மடங்கு பெருகிவிட்டது. சமுதாயத்தையும், ஆலயத்தையும் நாம் பிரிக்க முடியாது. செபமும், சமூகமும் வேறாக முடியாது. இரண்டும் ஒன்றுதான். இரண்டுமே இரண்டு கண்கள் தான். இதில் எதை விடுத்தாலும், இழப்பு நமக்குத்தான்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.