இயேசு கிறிஸ்து – அனைத்துலகின் அரசர்

அரசர் என்பவர் யார்? ஓர் அரசர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி ஆள வேண்டும்? எப்படி தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கு இயேசு சிறந்த உதாரணம். இந்த உலகம் ஏற்றுக்கொள்வது போன்ற அரசர் இயேசு அல்ல. காரணம், அவர் அரசரின் வாரிசு அல்ல. தச்சரின் மகன். போரில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியவரும் அல்ல. ஆனால், மக்கள் அனைவரின் மனதிலும் குடிகொண்டு, குறிப்பாக, ஏழை, எளியவர்கள் நடுவில் தன்னை முழுமையாக ஒப்படைத்த ஒப்பற்ற அரசர். அவர்கள் வாழ்வை உயர்த்துவதற்காக முழுமையாக அர்ப்பணித்தவர்.

ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறபோது, மற்றவருக்கு உதவி செய்ய மனமிருக்கலாம். அப்படி இருப்பவர்கள் கூட இன்றைக்கு அரிதாகி விட்டார்கள். ஆனால், துன்பத்தில் இருக்கிறதுபோது, தனது உயிரே ஊசலாடிக்கொண்டிருக்கிறபோது, தனது நிலையே மற்றவர்களால் பரிதாபப்படுகிறதுபோல இருக்கிறபோது, ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்கிறார் என்றால், அதுதான் ஒரு அரசரின் உணர்வாக இருக்க வேண்டும். அதுதான் நம்மை ஆளுகிறவர்களின் வாழ்க்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களை பலிகொடுத்து, தான் ஆள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல்வா(வி)யாதிகள் மற்றும் ஆளுகிறவர்கள். தான் இறக்கக்கூடிய நேரத்திலும் ஒரு மனிதனுக்கு மீட்பைப் பெற்றுத்தரக்கூடிய மிகப்பெரிய மனமுள்ளவராக இறந்தவர் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து.

இயேசு இந்த உலகத்தின் அரசர் மட்டுமல்ல. எல்லா உலகத்திற்கும் அரசர். அவர் அரச பதவியை விரும்புகிறவராக இந்த உலகத்தில் வாழவில்லை. ஆனால், மக்கள் அவருக்கு அந்த இடத்தை கொடுத்தனர். நமது பணிவாழ்வும் எந்நாளும் மக்களுக்கானதாக, மக்களுக்காக வாழக்கூடியதாக இருக்க வேண்டும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.