இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை. எபிரேயர் 9 : 22

உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப் படுகின்றன. அதனால் இயேசு தம்மையே பாவ பலியாக கொடுக்கவே இந்த பூமிக்கு வந்தார். அவருடையே இரத்தமே எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். தூய்மைப் படுத்திக்கொண்டு இருக்கிறது. மோசேயின் காலத்தில் ஆடு, மாடுகள் பலியிடப்பட்டு குருவானவர் தமக்காகவும், மக்களுக்காகவும் அவற்றின் இரத்தத்தைக் கொண்டுப்போய் இரண்டாம் கூடாரத்தில் படைப்பார். அவர்கள் தங்கள் வழிப்பாட்டு பணிகளை நிறைவேற்ற முன் கூடாரத்தில் மட்டுமே நுழைவார்கள். இரண்டாம் கூடாரத்தில் தலைமைக் குரு மட்டுமே ஆண்டுக்கு ஒருமுறை செல்வார்.

இதனால் நாம் அறிவது தூய ஆவியார், முன்கூடாரம் நீடித்து இருக்கும்வரை, தூயகத்திற்குச் செல்லும் வழி இன்னும் வெளிப்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறார். ஆனால் இப்போது கிறிஸ்து தலைமைக்குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்கு கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதைவிட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல. படைக்கப்பட்ட ஆடு, மாடுகளின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. இயேசு ஒருமுறை இந்த தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்திருக்கிறார்.

ஆடு,மாடுகளின் இரத்தம் தெளிக்கப்பட்டு ஒரு சடங்கு முறைப்படியே தூய்மை பெற்றார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம் வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு சாவுக்கு அழைத்து செல்லும் செயல்களில் இருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாகத் தூய்மைப்படுத்துகிறது!! ஏனெனில், என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே.

ஆகையால் என்றும் நிலைக்கும் உரிமைப் பேற்றை பெறுவதற்கு என்று இயேசுவின் இரத்தத்தின் மூலம் புதிய உடன்படிக்கையை கடவுள் நமக்காக ஏற்படுத்தியுள்ளார். ஏனெனில்,விருப்ப ஆவணம்
ஓன்று இருக்கிறது என்றால் அதனை எழுதியவர் இறந்து விட்டார் என்று மெய்ப்பிக்கப்பட வேண்டும்.ஒருவர் சாவுக்குப் பின்தான் ஆவணம் உறுதிப்பெறும் ஒருவர் உயிரோடு இருக்கும் வரை அந்த ஆவணம் செல்லுபடியாகாது. அதனால்தான் முன்னைய உடன்படிக்கையும் இரத்தம் சிந்தாமல் தொடங்கப்படவில்லை.

மோசேயின் காலத்தில் ஆடு,மாடுகளின் இரத்தத்தை தண்ணீரோடு கலந்து மக்கள் மீது குருவானவர் தெளிப்பார். அப்பொழுது அவர்கள் பாவங்கள் நீக்கப்பட்டு தூய்மைப் படுத்தப்படுகிறார்கள். மண்ணுலகில் வாழ்வதற்கு அது ஏற்றதாக இருந்தது. ஆனால் நாம் யாவரும்
இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் தூய்மையாக்கப்பட்டு இப்பொழுது விண்ணுலகிற்கு நுழைய தகுதி பெற்றிருக்கிறோம். ஏனெனில் இப்போது நம்முடைய சார்பாகக் கடவுளின் திருமுன் நமக்காக
பரிந்து பேசுபவராக கிறிஸ்து நிற்கிறார். தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்தோடு ஆண்டுதோறும் தூயகத்திற்கு செல்வார். இப்போ அதற்கு மாறாக,கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார்.இயேசு அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை அவ்வாறு செய்தால் உலகம் தோன்றிய காலந்தொட்டு அவர் மீண்டும், மீண்டும் சிலுவையில் அடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இப்போதோ உலகம் முடியும் காலமாக இருப்பதால் தம்மையே பலியாகக் கொடுத்து,பாவங்களை போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் மீண்டும் ஒருமுறை
தோன்றுவார். ஆனால் பாவத்தின் பொருட்டு அல்ல. அவருக்காக காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார். அன்று ஒரு மூலையில் ஒரு மாட்டுக்கொட்டகையில் பிறந்து தமது உயிரை நமக்காக கொடுத்து சென்றார். ஆனால் அவருடைய இரண்டாவது வருகை இந்த உலகமே பார்க்கும்படி வருவார். அவரை ஏற்றுக்கொண்ட அனைவரும் பாக்கியவான்கள், பாக்கியவதிகள்.

யாவே கடவுளாம், யெகோவா கர்த்தரே!!

உம்மை போற்றுகிறோம். நீர் மண்ணுலகிற்கு வந்து, விண்ணுலகிற்கு சென்று உள்ளீர். ஆனாலும் மறுபடியும் உமது தூதர்களோடும் எக்காள முழக்கத்தொடும் இந்த உலகிற்கு வருவீர். இந்த பூமியில் வாழும் மக்கள் யாவரும் பார்க்கப்போகிறார்கள். தகப்பனே! ஆனால் இப்போது அவர்கள் கண்கள் குருடாக இருக்கிறதே, அவர்கள்மேல் மனதுருகி அவர்கள் கண்களை திறந்தருளும். உம்மை அறிகிற அறிவினால் நிரப்பும். உமக்கென்று வாழும் வாழ்க்கையை கட்டளையிடும். அவர்
கள் அறியாமையை போக்கியருளும். கிறிஸ்துவம் என்பது ஒரு மதம் அல்ல. அதுவே மார்க்கம் என்று இந்த பூமியின் குடிகள் உணர அவர்களுக்கு உமது உணர்வுள்ள ஆவியை தந்தருளும்.அப்பா,
நாங்கள் எங்கே போவோம்? உம்மிடத்தில் மாத்திரமே வாழ்வு தரும் வார்த்தை உள்ளது என்று எல்லா இனத்தாரும், ஜனத்தாரும் அறியும்படி செய்யும்.எங்கள் ஜெபத்தை கேட்பதற்காக உமக்கு கோடி நன்றி சொல்கிறோம். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி நிற்கிறோம் நல்ல பிதாவே!

ஆமென்! அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.