இறைத்தந்தையின் இரக்கம்

1யோவான் 1: 1 – 4

யோவானின் நற்செய்தியில், முதல் அதிகாரம் ஒட்டுமொத்த புத்தகத்தின் சுருக்கமாக இருப்பது போல, இந்த கடிதத்தின் முதல் நான்கு இறைவார்த்தைகள், ஒட்டுமொத்த நூலின் சாராம்சமாக பார்க்கப்படுகிறது. கடவுள் தான் நிலைவாழ்வை அருள்கிறவர். அந்த நிலைவாழ்வு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக இந்த உலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நம்முடைய பாவங்களை மறைத்து விட்டு, கடவுள் முன் நிற்போமேயானால், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. அதே வேளையில், நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய மன்னிப்பிற்காக நாம் காத்திருப்போமே என்றால், நாம் மீட்கப்படுவோம். அதுதான் இங்கு நமக்கு தரப்படுகிற செய்தியாக இருக்கிறது.

கடவுள் யாரையும் நிர்கதியாக விட்டு விட வேண்டும் என நினைத்ததில்லை. இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் குழந்தையே. அனைவரையும் மீட்க வேண்டும் என்பதே கடவுளின் திட்டம். இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. எப்படி நிறைவேற்றினார்? நமக்காக சிலுவையில் அறையப்பட்டு, வேதனைப்பட்டு இறந்து, உயிர்த்தெழுந்து நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தார். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தது உண்மையே. ஏனென்றால், அவருடைய சீடர்களுக்கு அவர் உயிர்த்த பிறகு தோன்றினார். அதையே யோவானும் அவருடைய இந்த கடிதத்தில் குறிப்பிடுகிறார், ”கண்ணால் கண்டோம், உற்று நோக்கினோம், கையால் தொட்டுணர்ந்தோம்”. ஆக, உயிர்த்த ஆண்டவரில் நாம் அனைவரும் நம்பிக்கை வைக்க இந்த பகுதி நமக்கு அழைப்புவிடுக்கிறது.

இறைவனின் இரக்கத்தைப் பெறுவது கடினமான காரியம் அல்ல. அது எளிதானது. ஆனால், அந்த எளிதான காரியத்தைச் செய்வதற்கு பலருக்கு மனம் இருப்பதில்லை. நாம் செய்ய வேண்டியது எல்லாம், நம்முடைய பாவங்களை எண்ணிப் பார்த்து மனம் வருந்த வேண்டும். இறைவனின் இரக்கத்தைப் பெறுவதற்கு நாம் தயாராக இருக்கிறோமா? எண்ணிப் பார்ப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.