இறையாட்சியைப் பற்றிக்கொள்வோம்

இயேசு வாழ்ந்த காலத்தில் பணத்தை சேமித்து வைப்பதற்கு வங்கிகள் இல்லாமல் இல்லை. ஆனால், சாதாரண மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றார்போல வங்கிகள் இல்லை. செல்வந்தர்கள் மட்டுமே இவற்றைப் பயன்படுத்த முடியும். சாதாரண மக்கள் நிலத்தில் தாங்கள் சேர்த்து வைத்ததைப் புதைத்து வைப்பது வழக்கமாக இருந்தது. இதில் அவர்களுக்கு வேறு ஒரு நன்மையும் இருந்தது. பாலஸ்தீனப்பகுதி அடிக்கடி போரினால் தாக்கப்படும் பகுதியாக இருந்தது. பகைநாட்டவர் வரும்போது தங்களின் நிலங்களை விட்டுவிட்டு மக்கள் ஓடினாலும், திரும்பிவந்து, தங்கள் நிலத்தில் புதைத்து வைத்திருக்கிற பணத்தை பாதுகாப்பாக எடுக்க முடியும். எனவே, சாதாரண எளிய மக்கள், நிலத்தில் பணத்தைப் புதைத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இயேசு இந்த நற்செய்தியின் மூலம் நமக்குக் கற்றுத்தரும் செய்தி இறையாட்சிக்கு நம்மை தகுதிபடுத்திக்கொள்ள நம்மையே இழக்க முன்வர வேண்டும். இந்த உலகத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கு இறையாட்சி. அதுதான் நமது முதன்மையான நோக்கம். ஆனால் இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் எதை வைத்து நாம் இறையாட்சியை அடைவதற்கு முயல வேண்டுமோ, அதுதான் இலக்கு என்று நினைத்து, தங்கள் வாழ்வையே செல்வத்தை சேர்த்து வைப்பதுதான் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் சேர்க்கும் செல்வம் நமக்கு இறையாட்சியைப் பெற்றுத்தராது. ஆனால், நாம் சேர்க்கும் செல்வத்தின் வழியாக நாம் இறையாட்சியை அடைய முடியும். அதை நமது வாழ்வில் எப்பாடுபட்டாவது செய்து, இறையாட்சியை அடைய முற்பட இயேசுவின் வாழ்வு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

இறையாட்சியைப் பற்றிய கவலை இப்போது உள்ள தலைமுறைகளுக்கு இருக்கிறதா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி. செல்வம் சேர்ப்பதும், ஏழு தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதும் தான் இப்போதைய தலைமுறையின் கவலை. அதை விடுத்து, இறையாட்சியைப் பெற முயல்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.