இறைவனின் பார்வை

திருத்தூதர் பணி 11: 1 – 18

மனிதர்களின் பார்வையும், கடவுளின் எண்ணங்களும் எந்த அளவிற்கு வேறுபாடானதாக இருக்கிறது என்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. பேதுரு ஒரு யூதர். அவருடைய பார்வை யூதப்பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது. அந்த பாரம்பரியத்தின் பார்வையில் தான், எது தவறு? எது சரி? என்று அவர் முடிவெடுக்கிறார். யூதர்களுக்கு தங்களது இனம் தான் தூயது என்கிற எண்ணம் இயல்பாகவே இருந்தது. பேதுருவும் அந்த சிந்தனையில் தான் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் வேறு இனத்தவரோடு, அதாவது விருத்தசேதனம் செய்யாத இனத்தவரோடு உணவு உண்டது, மற்றவர்களுக்கு இடறலாக இருப்பதாக, அவரிடத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கான பதிலாக, தான் கண்ட காட்சியை பேதுரு வெளிப்படுத்துகிறார்.

ஒருவர் எந்த இனத்திலிருக்கிறார் என்பது முக்கியமல்ல. அவர் பெற்றிருக்கிற விசுவாசம் தான், அவரை கிறிஸ்துவுக்குள் இருக்கிறவராக காட்டுகிறது. உண்மையான கிறிஸ்தவர் என்பது, நாம் சார்ந்திருக்கிற இனத்தின் மூலமாக அல்ல, மாறாக, நாம் பெற்றிருக்கிற விசுவாசத்தின் மூலமாகத்தான் என்பது, இங்கு நமக்கு தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. நேர்மையான உள்ளத்தோடு, உண்மையான மனநிலையோடு நாம் கடவுளைத் தேடுகிறபோது, நிச்சயமாக நாம் கடவுளை அடைய முடியும். அது கடினமானது அல்ல. நாம் கொண்டிருக்கிற நம்பிக்கை நம்மை கடவுளிடம் கொண்டு போய் சேர்த்து விடும். அதற்கு இன்றைய பகுதி சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இன்றைய நாம் வாழும் நாட்டில், மதத்தின் பெயரால் கேவலமான காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது. மதம் ஒருவனை முட்டாளாக்குகிறது. மதத்தின் பெயரால் அடாவடித்தனங்கள் நடந்து கொண்டிருக்கிறது. எந்த மதமாக இருந்தாலும், அது கண்டிக்கத்தக்கது. இறைவனுடைய பார்வையில் அருவருக்கத்தக்கது. அதற்கான கூலியை ஒருவர் நிச்சயம் பெற்றுக்கொள்வார் என்பதில் ஐயமில்லை.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.