இறைவன் படைத்த உலகம்

ஒரு விவசாயி நெல்லை விதைக்கிறான். அதற்கான காரணம் என்ன? அவனுடைய நோக்கம் என்ன? நல்ல அறுவடையைப் பெற வேண்டும் என்பதுதான். நல்ல அறுவடையைப் பெறுவதற்காக அவன் அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறான். மரங்கள் செழித்து வளர்கிறது. அவைகளின் நோக்கம் என்ன? நல்ல பழங்களை மக்களுக்குக் கொடுக்கிறது. இவ்வாறு இந்த இயற்கையில் காணப்படும் அனைத்துமே, பலன் கொடுப்பதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறது.

மனிதன் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டிருக்கிறான். படைப்பின் சிகரமாக படைக்கப்பட்டிருக்கிறான். இந்த உலகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறான். இந்த உலகத்திற்கே கடவுள் அவனை பொறுப்பாளனாக மாற்றியிருக்கிறார். அப்படியென்றால், நாம் எந்த அளவுக்கு பலன் தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும், என்பதை உணர்த்துகின்றது இன்றைய நற்செய்தி பகுதி. இந்த உலகத்தை அழகுபடுத்துவதற்கும், அதனைப் பயன்படுத்தி இன்னும் பல சாதனைகளைச் செய்வதற்கும் கடவுள் நமக்கு படைப்பாற்றலைக் கொடுத்திருக்கிறார். ஆனால், ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு இதனைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, நாம் அழிவுக்கு இட்டுச்செல்லக்கூடிய காரியங்களுக்கு இந்த உலகம் என்னும் பூமியை நாம் சிதைத்துக்கொண்டிருக்கிறோம். நமது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து நாம் மீள வேண்டும்.

இந்த உலகத்தைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். நாம் இந்த உலகத்தை மாசுபடுத்தக்கூடாது என்கிற எண்ணம் நமக்கு வேண்டும். இந்த உலகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு வேண்டும். இந்த உலகத்தை தூய்மையாக வைக்க நாம் என்ன செய்ய முடியுமோ, அதனைச் செய்ய உறுதி எடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.