உங்களை நம்ப முடியுமா?

லூக்கா 16:9-15

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

மனிதர்கள் பல விதங்களில் தங்களுடைய உண்மை நிலையை இழந்து வருகின்றனர். பல விதங்களில் பல வேடங்களை அணிகின்றனர். யாரையும் நம்ப முடியவில்லை என்பதுதான் பலரின் கூற்று. இது கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல. உண்மையை எடுத்துரைப்பதே என் பணி என்ற நமது ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும், நம்பிக்கைக்குரியவர்களாக சாட்சியம் பகர வேண்டும் என்பதே இன்றைய வாசகத்தின் அழைப்பு. நம்பிக்கைக்குரியவர்களாக மாற இரண்டு ஆசைகளை தவிர்க்க வேண்டும்.

1. பணம்
பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள் பெரும்பாலும் உண்மையுள்ளவர்களாக, நம்பக்கூடியவர்களாக இருப்பதில்லை. பணம் அவர்களை நடிக்க சொல்கிறது. பொய் சொல்ல வைக்கிறது. அவர்களின் பேச்சில் சுத்தம் இருப்பதில்லை. ஆளுக்கு ஆள் மாறும் குணம் கொண்டவர்கள் இவர்கள். ஒருசில காலங்கள் இவா்கள் வாழ்கை ஓடும். மிகவும் விரைவாக அவர்களின் போலித்தனம் அனைவருக்கும் தெரிந்துவிடும். ஆகவே பணத்தின் மீதான ஆசையை எடுத்தெறியுங்கள். நம்பிக்கைக்குரியவர்களாக மாறுங்கள்.

2. செல்வம்
செல்வம் அதிகம் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மையின் பக்கமாக நிற்க முடியாமல் ஓடுகிறார்கள். அவர்களிடத்தில் நம்பிக்கை என்பது இருப்பதில்லை. பிறரை எப்படி ஏமாற்றலாம் என்பதிலே அவர்கள் குறி வைப்பதனால் நம்பிக்கையின் முன் அவர்கள் கூனி குறுகி நிற்கின்றனர். ஆகவே செல்வத்தின் மீதான ஆசையை எடுத்தெறியுங்கள். நம்பிக்கைக்குரியவர்களாக மாறுங்கள்.

மனதில் கேட்க…
1. என்னை எல்லாரும் நம்பலாமா? நம்பமுடியாதா?
2. பணம், செல்வம் சேர்க்கும் ஆசை என்னை நம்பிக்கைக்குரிய நிலையிலிந்து பிரிக்கிறது இது எனக்கு தெரியுமா?

மனதில் பதிக்க…
செல்வத்தின் மீதுள்ள விழிப்பு உடலை நலியச் செய்கிறது. அதைப் பற்றிய கவலை உறக்கத்தை துரத்தியடிக்கின்றது (சீரா 31:1)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.