உண்டார்கள், குடித்தார்கள் !

நோவாவின் காலத்திலும், லோத்தின் காலத்திலும் நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் இயேசு, வரலாற்றிலிருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். நோவாவின் காலத்தில் மக்கள் இறையச்சம் இன்றி உண்டும், குடித்தும் வந்தார்கள். லோத்தின் காலத்திலும் இறைவனின் கட்டளைகளை மக்கள் மறந்தார்கள். உண்டார்கள், குடித்தார்கள். வாங்கினார்கள், விற்றார்கள். நட்டார்கள், கட்டினார்கள். அதாவது, இந்த உலகின் செயல்பாடுகளிலேயே கவனமாக இருந்தார்கள், ஆனால், விண்ணக வாழ்வுக்குரிய செயல்பாடுகளை மறந்தார்கள் அல்லது புறக்கணித்தார்கள். எனவே, அழிந்தார்கள். எனவே, எச்சரி;க்கையாயிருங்கள் என்கிறார் இயேசு.

இந்த 21ஆம் நூற்றாண்டில் பழைய காலத் தவறுகளையே நாம் மீண்டும் செய்கிறோமோ என்று தோன்றுகிறது. நமது காலத்திலும் மக்கள் அலுவலகம் செல்வதிலும், பணம் சம்பாதிப்பதிலும், கடன் வாங்கி வீடு கட்டுவதிலும், வணிகம் செய்வதிலும், பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதிலும் செலவழிக்கும் நேரமும், அக்கறையும் இறைவனுக்குரிய , இறையாட்சிக்குரியவற்றில் செலவழிப்பதில்லை. எனவே, நோவாவின் காலத்தில் நடைபெற்றது போல, லோத்தின் காலத்தில் நடைபெற்றது போல, அழிவுக்குரிய செயல்கள் நமக்கும் நடக்கின்றன. புதிது புதிதாகத் தோன்றுகின்ற பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள், உலகம் சூடாதல் போன்ற சுற்றுச்சூழல் சிக்கல்கள், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற தீமைகள் அனைத்தும் நம்மைச் சூழ்கின்றன. எனவே, தன்னலம் மிக்க செயல்களில் மட்டுமே ஈடுபடாது, உலகம் உய்வதற்கான செயல்பாடுகளிலும் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

மன்றாடுவோம்: நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். கடந்த காலத் தவறுகளிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ளவும், இறையச்சம் மிக்கவர்களாக, பிறர் நலப் பணிகளில் எம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும் எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.