உண்மையான வாழ்வு

நானே உண்மையான திராட்சைச் செடி என்று இயேசு கூறுகிறார். “உண்மையான“ என்கிற வார்த்தை எதைக்குறிக்கிறது? அதனுடைய விவிலியப்பிண்ணனி என்ன? என்பதை இங்கு பார்க்கலாம். பழைய ஏற்பாட்டில் எப்போதெல்லாம், திராட்சைச்செடி பற்றிய செய்தி வந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் எதிர்மறையாகத்தான் பெரும்பாலும் சொல்லப்பட்டிருக்கிறது. திராட்சைச்செடி இஸ்ரயேலுக்கு ஒப்பிடப்பட்டாலும், இஸ்ரயேலின் தவறான அணுகுமுறைதான் இறைவாக்கினர்களால், திராட்சைச்செடியோடு ஒப்பிடப்படுகிறது. உதாரணமாக, இறைவாக்கினர் எரேமியா, இஸ்ரயேலை காட்டுத்திராட்சைக்கு ஒப்பிடுகிறார். அதிலிருந்து உண்பதற்கான பழங்களைப் பார்க்கமுடியவில்லை என்றும் கூறுகிறார். இதே கருத்தைத்தான் இறைவாக்கினர் எசாயாவும் முன்வைக்கிறார். ஆக, இங்கே திராட்சைச்செடி போலியானதாக சித்தரிக்கப்படுகிறது.

இயேசு சொல்ல வருகிற செய்தி இதுதான்: இஸ்ரயேல் கடவுளின் உண்மையான திராட்சைச்செடியாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. இஸ்ரயேலின் நடத்தையைப் பார்க்கிறபோது, அது உண்மையான திராட்சைச்செடியாக இல்லை. இயேசு தான் உண்மையான திராட்சைச்செடி. யூதர்கள் என்பதால் யாரும் மீட்பு பெற்றுவிட முடியாது. யூதராக இருந்தாலும், அதற்கேற்ற வாழ்வை வெளிப்படுத்த வேண்டும். யூத நம்பிக்கை வாழ்ந்து காட்டப்பட வேண்டும். அதாவது, இயேசு தான் உண்மையான மீட்பர் என்பதை அறிந்து கொள்ளக்கூடிய, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இயேசுவை ஏற்றுக்கொள்ளாத எவரும், யூதராக இருந்தாலும், மீட்பு பெற முடியாது. காரணம், இயேசு தான் உண்மையான திராட்சைச்செடி.

நமது வாழ்க்கை கடவுளுக்கு பிரியமான முறையில் வாழ்ந்து காட்டப்பட வேண்டும். மற்றவர்களைத் திருப்திப்படுத்துவது நமது வாழ்வின் நோக்கமல்ல. மாறாக, நமது மனச்சாட்சிக்கு ஏற்றாற்போல வாழக்கூடிய வாழ்வை, நாம் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான வாழ்வு. அதுதான் போலித்தனம் இல்லாத வாழ்வு. அந்த வாழ்வை நாம் வாழ உறுதியும், முயற்சியும் எடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.