உண்மையான விசுவாசம்

லூக்கா நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில், இயேசு சதுசேயர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஒரே இடமாக, இந்த வாக்குவாதம் அமைகிறது. சதுசேயர்கள் தாங்கள் என்ன செய்தோம், எதை நம்புகிறோம்? என்று அறியப்படுவதைவிட, எதை நம்பவில்லை என்பதன் அடிப்படையில், இந்த நற்செய்தியில் அறியப்படுகிறார்கள். சதுசேயர்கள் எதற்காக உயிர்த்தெழுதலை நம்பவில்லை? எதனால் அவர்கள் உயிர்த்தெழுதலை நம்பாதவர்களாக இருந்தனர்? இந்த கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்தபின், இந்த வாசகம் நமக்குத்தரும் செய்தியைப் பார்ப்போம்.

அடிப்படையில் சதுசேயர்கள் “தோரா” என்று சொல்லப்படுகின்ற, முதல் ஐந்து புத்தகங்களை மட்டுமே நம்பினார்கள். ஆனால், பரிசேயர்கள் மற்ற புத்தகங்களையும் கடவுளால் ஏவப்பட்ட நூல்களாக நம்பினார்கள். முதல் ஐந்து புத்தகங்களில் உயிர்த்தெழுதல் பற்றிய வார்த்தைகள் இல்லை. இந்த உயிர்த்தெழுதல் பற்றிய எண்ணங்கள், சிந்தனைகள் தாமதமாகத் தோன்றியவை. எனவே, அவைகளைப் பற்றிய குறிப்பை நாம், தொடக்க புத்தகங்களில் பார்க்க முடியாது. இந்த வேறுபாடு தான், சதுசேயர்களையும், பரிசேயர்களையும் பிரிப்பதாக அமைந்தது. இதுதான் இவர்களை, ஒருவர் மற்றவர்க்கு எதிராக வேறுபடுத்திக் காட்டுவதாக அமைந்தது. சதுசேயர்களும், பரிசேயர்களும் அடிப்படையில் நம்பிக்கைவாதிகள் என்றாலும், அவர்கள் கொண்டிருந்த அடிப்படை நம்பிக்கை, இரண்டுபேரையும் வேறுபடுத்திக் காட்டியது. பகையாளிகளாகச் சித்தரித்தது. இரண்டுபேரையும் சகோதரர்களாக மாற்ற வேண்டிய நம்பிக்கை, அவர்களைப் பிரித்தால், அது நம்பிக்கையின் மீதுள்ள குறைபாடு அல்ல. அதை தவறாகப் புரிந்து கொண்டவர்களின் குற்றம்.

விசுவாசம் என்பது நம்மை இணைப்பதாக அமைய வேண்டும். நாம் வழிபடுகின்ற இறைவனும், நாம் கொண்டிருக்கிற விசுவாசமும் நம்மை ஒன்றிணைப்பதாக அமைய வேண்டும். இல்லையென்றால், அந்த விசுவாசம் கேள்விக்குறியாக்கப்படுகிறது. பரிசேயர்களும், சதுசேயர்களும் கொண்டிருந்த விசுவாசம் உண்மையானதானதா? என்பது, அவர்களது வாழ்க்கை நமக்கு எழுப்பக்கூடிய கேள்வி. நமது வாழ்க்கை திருந்துவதற்கான ஓர் அழைப்பு.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.