உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்

தாங்க முடியாத துன்பத்தில் இருக்கிற ஒரு நம்பிக்கையாளரின் செபம் தான் இந்த திருப்பாடல்(திருப்பாடல் 31: 4 – 5, 13, 14 – 15, 16). துன்பங்களுக்கான காரணத்தை அவரே ஏற்றுக்கொள்கிறார். அவர் செய்த தவறுகள் தான், இப்போது துன்பங்களாக அவர் முன்னிலையில் வந்திருக்கிறது. கடவுளை விட்டு விலகிய அவரது தவறு தான், இன்றைக்கு மிகச்சிக்கலான கண்ணியில் அவரை சிக்க வைத்திருக்கிறது. இந்த சிக்கலிலிருந்து தன்னை விடுவிக்கக்கூடியவர் கடவுள் மட்டும் தான், என்று அவர் தீவிரமாக நம்புகிறார். அந்த நம்பிக்கையை செபமாக எழுப்புகிறார்.

கடவுளிடத்தில் அவருடைய அருளை வேண்டுவதற்கு தகுதியில்லாத நிலையில் இருப்பதாக, ஆசிரியர் நினைக்கிறார். ஏனென்றால், கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் மறந்து அவர் வாழ்ந்திருக்கிறார். இப்போது கடவுளிடத்தில் தேவைக்காக திரும்பி வந்திருக்கிறார். அவர் கடவுளின் அருளைப் பெற தகுதியற்ற நிலையில் இருக்கிறார். தகுதியற்ற நிலையில் இருக்கிற அவருக்கு, கடவுள் தன்னுடைய அன்பை வழங்கினால் மட்டும் தான், இந்த துன்பத்திலிருந்து அவர் விடுதலை பெற முடியும். கடவுளுடைய அன்பு மட்டும் தான், அவரை விடுவிக்க முடியும். ஏனென்றால், எல்லா திசைகளிலுமிருந்தும், அவருக்கு நெருக்கடி தரப்படுகிறது. அவரது உயிருக்கு ஆபத்து காத்திருக்கிறது. கடவுளிடத்தில் நம்மையே நாம் கையளிக்கிறபோது, நிச்சயம் கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று, ஆசிரியர் உறுதியாக நம்புகிறார்.

நமது ஆபத்து காலத்தில், கடவுளிடத்தில் நம்மை முழுமையாகக் கையளிக்கிறபோது, கடவுள் நிச்சயம் நம்மீது மனமிரங்குவார். நம்மை வழிநடத்துவார். அவருடைய வலக்கரம் எப்போதும் நம்மோடிருந்து, நம்மைக் காப்பாற்றும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.