உம்மையே நம்பும் எங்கள் மீது உம் பேரன்பு இருப்பதாக!

திருப்பாடல் 33: 2 – 3, 10 – 11, 18 – 19

கடவுளைப் போற்றுவதும், புகழ்வதுமே இந்த திருப்பாடலின் நோக்கம். இந்த திருப்பாடல் “யாவே“ இறைவனை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள பாடல். யாவே இறைவனை நேர்மையாளர்கள் அனைவரும் புகழ வேண்டும் என்கிற விண்ணப்பத்தோடு இந்த பாடல் தொடங்குகிறது. கடவுள் மக்களால் மகிமைப்படுத்துவதற்குரியவர். ஏனென்றால் பரந்து விரிந்திருக்கிற இந்த உலகத்தை அவர் தன்னுடைய வல்லமையினால் படைத்தார். இந்த உலகத்திலிருக்கிற அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் கொடுத்தவர் கடவுளே. எனவே, நாம் எப்போதும் கடவுளைப் போற்றுதற்கு தயாராக இருக்க வேண்டும்.

தன் மக்களின் எதிரிகளுக்கு எதிரான சதித்திட்டங்களை ஆண்டவர் முறியடித்து எப்போதும் வெற்றியை நிலைநாட்டக்கூடியவராக இருக்கிறார். இறைவன் மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும், அவர்களை வழிநடத்த அவர் மேற்கொள்ளக்கூடிய எல்லாவகை திட்டங்களையும் இந்த திருப்பாடல் வெளிப்படுத்துகிறது. இதே சிந்தனை இன்றைய நற்செய்தியிலும் வெளிப்படுகிறது. இயேசு தன்னுடைய பணியை தொடர, திருத்தூதர்களை அழைக்கிறார். இந்த அழைப்பு தீமைக்கு எதிரான அவருடைய போராட்டத்தில் அவருக்கு துணைநிற்கக் கூடியதாக இருக்கிறது. தீமையை அடக்கி ஒடுக்கி, மக்களுக்கு விடுதலையைத் தர வேண்டும் என்பதில் ஆண்டவர் அதிக அக்கறை கொண்டவராக இருக்கிறார் என்பது இங்கே புலப்படுகிறது.

நம்முடைய வாழ்க்கையில் நாம் தீமை செய்கிறவர்களாக இல்லாமலும், தீமைக்கு எதிரான போராட்டத்தில் முழுமையாக பங்கெடுக்கிறவர்களாக வாழவும் இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. தீமைக்கு எதிரான இறைவனின் போராட்டத்தில் நாமும் நம்மை முழுவதுமாக பங்கெடுத்து, இறைவனின் கரங்களாக மாறுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.