எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்

ஆண்டவரின் பிரசன்னம் என்றும் நம்மோடு இருக்கிறது என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் (+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20)தெளிவாக எடுத்துரைக்கிறது. “இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்கிறார். பொதுவாக மற்ற சமயங்களில் கடவுள் என்கிறவர் எங்கோ இருந்துகொண்டு மக்களைப்பார்த்துக் கொண்டு இருக்கிறவர் போல சித்தரிக்கப்படுகிறார். ஆனால், கிறிஸ்தவ சமயத்தில் கடவுள் மக்களோடு இருக்கிறவராக தன்னை வெளிப்படுத்துகிறார். அவருடைய பிறப்பான ‘இம்மானுவேல்’ என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பதே சிறந்த செய்தி.

விவிலியம் முழுவதும் கடவுள் மக்களோடு, குறிப்பாக ஏழை, எளிய மக்களோடு, துன்பப்படுகிற, துயரத்தால் வாடுகிற மக்களோடு தன்னையே இணைத்துக்கொள்கிறார் என்பது திட்டவட்டமாகச் சொல்லப்படுகிறது. அவர் அவர்களோடு பயணித்திருக்கிறார். அவர்களோடு தங்கியிருக்கிறார். அவர்களை வழிநடத்தியிருக்கிறார். எகிப்திலே அடிமைத்தனத்தில் வீழ்ந்திருந்த இஸ்ரயேல் மக்களை, அவர்களோடு தங்கியிருந்து வழிநடத்தி அவர்களை பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்திற்கு வழிநடத்தினார். துன்பங்களைக்கண்டு விலகுகிறவர் அல்ல நமது கடவுள், மாறாக, துன்பங்களின் வழியாக மீட்பு உண்டு என்பதை தன் ஒரே மகனை இந்த உலகிற்கு அனுப்பி, நம்மோடு இருக்கச்செய்ததன் வாயிலாக வெளிப்படுத்தினார். இவ்வாறு, கடவுள் மக்களோடு இருக்கிறார் என்பதை மீட்பின் வரலாறு முழுவதும் வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றும் தொடர்ந்து தன்னுடைய பிரசன்னத்தினால் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வே நமக்கு மகிழ்வைத்தர வேண்டும். வேதனைகளால், பாரங்களால் துவண்டு, வாழ்வையே சுமையாக எண்ணிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த நற்செய்தி வாசகம் நிச்சயம் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.