எனக்கு நான் பகைவனா?

லூக்கா 11:15-26

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

நாம் அடுத்தவரோடு நட்புறவில் அன்புறவில் வாழ்வதற்கு முன் நம்மோடு நட்புறவில் அன்புறவில் வாழ வேண்டும். நான் என்னோடு நட்புறவில் அன்புறவில் வாழவில்லை என்றால் வளர்ச்சி என்பது இருக்காது. வருத்தம் என்பது வந்து சோ்ந்துக்கொண்டே இருக்கும். நான் எனக்கு பகைவனாக இருக்கும்போது என்ன நடக்கும் என்பதை எடுத்து வைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

1. அரசு கவிழும்
நான் நல்ல பாதையில் நடக்கவில்லை என்றால் என் அரசு கவிழும். இங்கு அரசு என்பது என் வாழ்க்கை. தீமையின் ஆட்சி எனக்குள்ளே நடக்கும் போது என் அரசை சரியாக என்னால் நடத்த முடியாது. ஆகவே நானே எனக்கு பகைவனாக மாறுகிறேன். என் அரசு தடம்புரள்கிறது.

2. ஆட்சி மாறும்
கடவுள் என் ஆட்சியை மிக சிறப்பாக நடத்துகின்ற அளவுக்கு அத்தனை திறமைகளையும் தந்தார். ஆனால் நான் தான் அதை உணரவில்லை. தீமையான ஆட்சி எனக்குள் நடத்தினேன். ஆகவே நான் இப்போது தகுதியற்றவன் ஆனேன். ஆகவே என் ஆட்சி என்பது மாறும். கடவுள் என்னை விட சிறப்பாக வாழும் மற்ற நபருக்கு ஆட்சியைக் கொடுப்பார். நான் ஆட்சியில்லாதவன் ஆவேன். காரணம் நானே எனக்குள்ளே நல்லதை விரும்பவில்லை. நானே எனக்கு பகைவன்.

மனதில் கேட்க…
1. நான் எனக்கு நண்பனா? அல்லது பகைவனா?
2. என்னுடைய ஆட்சி எப்படி போய்க்கொண்டிருக்கிறது?

மனதில் பதிக்க…
தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்து விடும். (லூக் 11:17)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.