எனை நான் கொடுத்தேன் இறைவா!!!

மற்றவர்களுக்கு கொடுக்கிற நாம், எப்படிப்பட்ட மனநிலையோடு கொடுக்கிறோம் என்பதை சுயஆய்வு செய்து பார்க்க இன்றைய வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது. கொடுத்தலில் பல வகைகள் இருக்கிறது. கொடுக்க வேண்டும் என்பதற்காக கொடுப்பது முதல் வகை. இது ஏதோ நாம் செய்ய வேண்டியது என்பதுபோல, மற்றவர்களின் மீது இரக்கமில்லாமல் “ஏதோ” மனநிலையோடு கொடுப்பது. இது சரியானது அல்ல.

எதிர்பார்த்து கொடுப்பது. இது ஒருவகையான முதலீடு போன்றது. இப்போது நான் கொடுக்கிறேன், எனக்குத்தேவை இருந்தால், எனக்கு ஏதாவது ஆதாயம் வேண்டுமென்றால் இதன் மூலம் சரிகட்டிக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்போடு கொடுப்பது இரண்டாம் வகை. இதுவும் சரியான பார்வை அல்ல. மதிப்பிற்காக கொடுப்பது. தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுவது. கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, தங்களின் பலத்தை, அதிகாரத்தை, உயர்ந்த நிலையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காகக் கொடுப்பது. இதுவும் சரியான மனநிலை அல்ல. கடைசி வகை: உள்ளுணர்வால் உந்தப்பட்டு கொடுப்பது. யோசனையோடு அல்ல, எதிர்பார்த்து அல்ல, தன்னை உயர்த்திப்பேசுவதற்காக அல்ல. மாறாக, கொடுக்காமல் இருக்க முடியாது என்ற நிலையில் கொடுப்பது. உள்ளுணர்வால் உந்தப்படுவது. இதுதான் கொடுத்தலின் சரியான பார்வை.

கடவுள் தனது மகனை இந்த உலகத்திற்கு கையளித்தது நம்மேல் வைத்திருக்கிற அன்பின் அடையாளம். அன்பினால் உந்தப்பட்டு, நம்மேல் பரிவு கொண்டு தனது மகனை நமக்கு கொடுக்கிறார். நாமும் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு அழைக்கப்படுகிறோம். எதைக்கொடுப்பது? எப்படிப்பட்ட மனநிலையோடு கொடுப்பது என்பதைச்சிந்திப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.