எல்லோர்க்கும் எல்லாமுமான இயேசு

இயேசுகிறிஸ்துவை எதற்காக திருமுழுக்கு யோவான், எலியா அல்லது இறைவாக்கினருள் ஒருவர் என்று மக்கள் சொல்ல வேண்டும்? திருமுழுக்கு யோவான் ஏரோதால் கொல்லப்பட்டார். ஆனாலும், மக்கள் நடுவில் திருமுழுக்கு யோவானுக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இருந்தது. அவர் தான் உயிரோடு வந்திருக்கிறார் என்று மக்கள் நம்பினர். யூத மக்கள் மெசியாவின் வருகைக்கு முன்னால் எலியா வருவார் என்று நம்பினர். மலாக்கி 4: 5 கூறுகிறது, “இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்”. எனவேதான் இன்றளவும், யூதர்கள் பாஸ்கா திருவிழாவைக் கொண்டாடும்போதும் எலியாவிற்காக ஒரு இருக்கையை காலியாக வைத்திருப்பர். எலியா மீண்டும் வருவார் என்று காத்திருந்தார்கள்.

இயேசு ஒரு முழுமையின் வடிவம். எல்லார்க்கும் எல்லாமுமாக இருந்தவர், இருக்கிறவர் இயேசு. எனவேதான் இயேசுவை மக்கள் பலவிதமாக பார்த்தார்கள். இயேசுவின் தனித்தன்மையும் இதுதான். இயேசு நமது மகிழ்ச்சியில் பங்குகொண்டு நமது மகிழ்ச்சியில் இன்பம் கொள்கிற நல்ல நண்பராக இருக்கிறார். துன்பங்களினால், துயரங்களினால் அலைக்கழிக்கப்படுகிறபோது, நம்மை விட்டு விலகாமல் நம்மோடு இருக்கிற தாயாக, தந்தையாக இருக்கிறார். சோதனை, பலவீனங்களினால் நாம் வீழ்கிறபோது நம்மைத்தூக்கிவிடுகிற நல்ல சகோதரனாக இருக்கிறார். மற்றவர்களுக்காக நமது வாழ்வைத்தியாகம் செய்து, பொதுநலனுக்காக உழைக்கிறபோது, நம்மை வெற்றியைநோக்கி வழிநடத்திச்செல்லுகிற, நல்ல இறைவனாக இருக்கிறார்.

எல்லார்க்கும் எல்லாமுமாக இருக்கிற இயேசுவாக நாமும் மாற வேண்டும் என்பது இறைத்தந்தையின் விருப்பம். கடவுள் இந்த உலகத்தைப்படைத்தது எல்லாருக்காகவும் தான். ஒருவர் மற்றவரோடு தோளோடு தோளாக துணைநின்று இறையரசை கட்டியெழுப்ப முனைவோம்.

– அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.