கடவுளின் முடிவில்லா ஆட்சி

சதுசேயர்கள் பலவற்றை யூத மதத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அறியப்படுவது உயிர்த்தெழுதலை வைத்துதான். உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாமை தான், சதுசேயர்களின் அடையாளமாக இருந்தது. சதுசேயர்களும் யூத மதத்தின் ஒரு பிரிவினர் தான். ஆனால், பரிசேயர்கள் அவர்களை அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவர்கள் உயிர்த்தெழுதலை நம்பியவர்கள். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. பரிசேயர்கள் விவிலியத்தை கடவுளின் வார்த்தையாகவே முழுமையாக நம்பியதால், உயிர்த்தெழுதல் உண்டு என்றே நம்பினர்.

லூக்கா நற்செய்தியாளர் இயேசு வழியாக இந்த உவமையைச் சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. யூதர்கள் உரோமையர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது கி.பி முதல் நூற்றாண்டிலும், எருசலேமையும், அதன் ஆலயத்தையும் அழித்தபோது, ஆயிரக்கணக்கான யூதர்கள் கணக்கின்றி கொல்லப்பட்டனர். உரோமையர்களின் கொலைவெறித்தாக்குதலில் இறந்தவர்கள் கடவுளின் வாக்குறுதிப்படி உயிர்த்தெழுவார்கள் என்கிற நம்பிக்கையை நற்செய்தியாளர் அந்த மக்களுக்கு விதைக்கிறார். இது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைக் கொன்றழித்து விட்டோம் என்று கொக்கரித்துக்கொண்டிருந்த உரோமையர்களுக்கும் சவுக்கடி கொடுக்கும்விதமாக எழுதப்படுகிறது. கடவுள் தன் மக்களுக்கு வாக்களித்த நிலையான வாழ்விற்குத்தான் அவர்கள் சென்றிருக்கிறார்களே தவிர, உரோமையர்களின் ஆணவத்திற்கு அவர்கள் பலியாகவில்லை என்பதை, அவர் எடுத்துரைக்கிறார்.

கடவுளின் ஆட்சி முடிவுறாதது. உண்மைக்காக, நீதிக்காக இன்று பலரை வெறிகொண்டு தாக்கி, அழித்துவிட்டதாகக் கேலி செய்யும் கயவர்களுக்கு, இறைவன் கொடுக்கும் தீர்ப்பு நாள் உண்டு என்பதையும், அவர்களின் கொடூரங்களுக்கு, அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதையும், இந்த பகுதி சொல்கிறது என்பதைக்காட்டிலும், நல்லோர் நிச்சயமாக கடவுளின் அரசில் நுழைவார்கள் என்பதுதான், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக நமக்குத்தரப்படுகிறது. அதனை உணர்ந்து அதற்கேற்ப நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.