காலம் தாழ்த்தாதே… கடவுளின் கைப்பிடி

லூக்கா 9:57-62

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

கடவுளைத் தேடுவதற்கும் கடவுளோடு பேசுவதற்கும் ஏன் கடவுளாயும் மாறுவதற்கும் நமக்கு பலவிதமான வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வாய்ப்புகளை எல்லாம் நாம் சரியாக பயன்படுத்துவதில்லை. அதனால் நாம் இழந்த ஆசீர்வாதங்கள் எண்ணிலடங்கா. இந்த நாள் கடவுளோடு சேருவதற்கான நாள். ஆகவே இந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்த நம்மை வருக! வருக! என அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

கடவுளோடு நாம் இழந்த வாய்ப்புகளை திரும்ப பெற, அவரின் ஆசீரோடு வாழ இரண்டு விதமான முயற்சிகளை கையிலெடுக்க வேண்டும்.

1. கடவுளுக்கு முக்கியத்துவம்
நற்செய்தியில் பார்க்கின்ற போது கடவுளுக்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுக்காததைப் பார்க்கிறோம். அவர்கள் தங்களுடைய சுயநல காரியங்களில் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு கடவுளை வெளியே தள்ளுகிறார்கள். கடவுளை வெளியே தள்ள தள்ள நம் வாழ்வு தள்ளாட ஆரம்பிக்கும்.

2. காலத்திற்கு முக்கியத்துவம்
காலம் பொன் போன்றது. ஆகவே காலத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். சிறுவயதிலிருந்தே கடவுளை சிக்கெனப் பிடிப்பவர்களுக்கு சிறப்பான உயர்வாழ்வு நிச்சயமே. ஆகவே முதுமையில் இறைவனை தேடினால் போதும் என்பது முற்றிலும் தவறானது. ஆகவே காலம் தாழ்த்தாதே, கடவுளின் கைப்பிடி.

மனதில் கேட்க…
1. கடவுளுக்கு நான் முதன்மையான முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்?
2. காலம் தாழ்த்தாமல் கடவுளின் கைப்பிடித்து சீரும் சிறப்புமாக வாழலாம் அல்லவா?

மனதில் பதிக்க…
படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது (திபா 84:1)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.