கிறிஸ்தவ ஒன்றிப்பு வாழ்க்கை

திருத்தூதர் பணி 15: 1 – 6

மோசேயின் சட்டப்படி, ஒவ்வொரு யூத ஆண்மகனுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். யூதர்கள் அனைவருமே விருத்தசேதனம் செய்திருந்தார்கள். அவர்கள் கடவுளுடனான உடன்படிக்கையின் அடையாளமாக விருத்தசேதனத்தை செய்திருந்தார்கள். அது அவர்களுக்கு முக்கியமான அடையாளம். மீட்பு பெறுவதற்கான அடையாளம். எனவே, யூத மறையின் தொடர்ச்சியாக கருதப்படும், கிறிஸ்தவத்தைத் தழுவுகிறவர்கள் கண்டிப்பாக மீட்பைப் பெற விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும் என்று, சில யூதர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இது தொடக்க கால கிறிஸ்தவர்கள் நடுவில் எழுந்த முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

நல்ல எண்ணத்தோடு, நன்மைத்தனத்தோடு வாழ வேண்டும் என்று நினைத்து வாழ விரும்புகிறவர்கள் சேர்ந்து வருகிறபோது, பிரச்சனைகளே இருக்காது என்று சொல்ல முடியாது. கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் நாம் உண்மையை உணர்ந்து கொள்ள உதவிகரமாக இருக்கிறது என்பதே உண்மை. தொடக்க கால திருச்சபையில், அனைவரும் ஒரே எண்ணத்தோடு, நல்ல எண்ணத்தோடு, கிறிஸ்தவ மதிப்பீடுகளின்படி வாழ்வதற்கு எல்லாவிதத்திலும் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுக்குள்ளாக ஒரு சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அந்த கருத்து வேறுபாடுகளை அவர்கள் இணைந்து, அதற்கு ஒரு தீர்வைக் காண முற்பட்டார்கள் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு விளக்கிக் காட்டுகிறது.

பிரச்சனைகள் வருகிறபோது, நாம் கூடி சேர்ந்து, மீண்டுமாக அதே நல்ல சிந்தனை மற்றும் எண்ணத்தோடு, அவற்றை விவாதிக்க வேண்டும். அந்த விவாதம் பல உண்மைகளை நமக்கு விளக்கிக் காட்டுவதாக அமையும். கருத்து வேறுபாடுகள் ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கக் கூடாது. அது நமக்குள்ளாக இருக்கிற பிணக்குகளை அகற்றி, இன்னும் அதிகமான பிணைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட பரந்துபட்ட எண்ணமுள்ளவர்களாய் வாழ நாம் முயற்சி எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.