கிறிஸ்துவுக்காக சான்று பகரும் வாழ்வு

திருத்தூதர்பணி 28: 16 – 20, 30 – 31

கிளாடியசின் காலத்தில் பெரும்பாலான யூதர்கள் உரோமை நகருக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்ட போதும், காலச்சூழலில் அவர்கள் உரோமை நகருக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கான சலுகைகளைப்பெற்று, மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர். அவர்களில் பலரை, பவுல் அழைத்துப்பேசுகிறார். தான் நிரபராதி என்பதை அவர்களுக்கு விளக்க முற்படுகிறார். தன்னைப் பற்றிய செய்தி, நிச்சயம் எல்லா யூதர்களுக்கும் சென்றிருக்கும் என்பதில் அவருக்கு சந்தேகம் ஒன்றுமில்லை. ஆனாலும், தன்னுடைய தரப்பு நியாயத்தை அவர் எடுத்துக்கூறுகிறார்.

இங்கே ஒன்றை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தன்னை நியாயப்படுத்த வேண்டும் என்பது, பவுலடியாரின் முதன்மையான நோக்கம் கிடையாது. அப்படிப்பட்ட எண்ணம் அவருக்கு துளியளவும் இல்லை. கடவுளின் பணியைச் செய்கிறேன் என்பதில், அவர் உறுதியோடு இருந்தார். அதற்காக எவருடைய எதிர்ப்பையும் சம்பாதிப்பதற்கு தயாராகவே இருந்தார். அரசராக இருந்தாலும், தனக்கு தண்டனை கொடுக்கிற நிலையில் இருந்தாலும், அதனைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால், கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான், அவருடைய உள்ளத்தில் இருந்த உணர்வு. அதனைத்தான், இங்கு வித்தியாசமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். அதனை அவர் துணிவோடும் உறுதியோடும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

எப்போதுமே நம்மைப்பற்றியும், நம்முடைய திறமைகளைப் பற்றியுமே சிந்தித்துக்கொண்டிருக்கிற நமக்கு, பவுலடியாரின் வாழ்க்கை கிறிஸ்துவுக்காக வாழ வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துவதாக அமைகிறது. தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் கிறிஸ்துவுக்காக அறிவித்த பவுலடியாரின் வாழ்வு, நமக்கும் முன்மாதிரியான வாழ்வாக மாறட்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.