தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்

திருப்பாடல் 50: 8 – 9, 16 – 17, 21, 23

சரியான பாதையில் நடக்கிறவர், தமது வழியைச் செம்மைப்படுத்துகிறவர் யார்? என்பது தான், இந்த பல்லவியைக் கேட்டவுடன் நமது சிந்தனையில் உதிப்பதாக இருக்கிறது. ஏனென்றால், அந்த கேள்விக்கான பதில் நமக்கு கிடைக்கிறபோது, நம்மால், கடவுள் அருளும் மீட்பைக் கண்டடைய முடியும். எசாயா 40: 3 ல், ”ஆண்டவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்” என்ற வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இது மனமாற்றத்தைக் குறிக்கக்கூடிய சொல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்த இறைவார்த்தையை, திருமுழுக்கு யோவானுடைய பணியை மையப்படுத்திய நிகழ்விலும் நாம் பார்க்கலாம். ஆக, செம்மைப்படுத்துதல் என்பது, மனமாற்றத்தைக் குறிக்கிறது.

கடவுள் நமக்கு மீட்பை தர தயாராக இருக்கிறார். அந்த மீட்பை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நமது வாழ்வை நாம் மாற்ற வேண்டும். மாற்றம் என்பது நமது வாழ்க்கையில் மற்றவர்கள் பார்க்கக்கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும். அது வெளிவேடத்தனமாக இருக்கக்கூடாது. மாறாக, மற்றவர்கள் நடுவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். மத்தேயு 3: 8 ல் திருமுழுக்கு யோவான் உண்மையான மனமாற்றத்தைப் பற்றிச் சொல்கிறபோது, ”நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை செயலில் காட்டுங்கள்” என்று சொல்கிறார். அதுதான் உண்மையான மனமாற்றம். நாம் கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துவது நல்லது தான். ஆனால், அதைவிட மிகச்சிறந்தது, கடவுளுக்கு ஏற்புடையது, கடவுள் விரும்புவது நமது வாழ்க்கைப்பலியை. அதனை நாம் கடவுளுக்கு காணிக்கையாக்குவதற்கு முயற்சி எடுப்போம்.

எல்லாக் காலமும் நமது வாழ்வை சிறப்பாக வாழ முயற்சி எடுக்கக்கூடிய காலம் என்றாலும், தவக்காலம் அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி தருகிறது. அதனை முழுமையாகப் பயன்படுத்தி, நமது வாழ்வை கடவுளுக்கு உகந்த பலிபொருளாக மாற்ற முயற்சி எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.