திருந்துகின்ற காலம்

கடவுள் இரக்கமுள்ளவர். மன்னிப்பு வழங்குவதற்காக காத்துக்கொண்டிருக்கிறவர். நம்மை முழுமையாக அன்பு செய்யக்கூடியவர். நாம் திருந்துவதற்கான வாய்ப்புக்களை நமக்கு ஏற்படுத்தி தந்து கொண்டே இருக்கக்கூடியவர். ஆனால், அந்த காலங்களை, வாய்ப்புக்களை நாம் விட்டுவிட்ட பிறகு, நமக்கான தீர்ப்பு குறிக்கப்பட்ட பிறகு, கடவுள் நீதியை நிலைநாட்டக்கூடியவராக இருக்கிறார் என்பதைத்தான், இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுத்தருகிறது.

ஏழை இலாசர் மற்றும் செல்வந்தன் உவமையில், செல்வந்தன் இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, கடவுளை அவன் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. கடவுள் மட்டில் அவனுக்கு பயம் இருந்ததாக தெரியவில்லை. செல்வம் தான், தன்னுடைய கடவுள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். மற்ற சிந்தனைகள் அவனுடைய மனதிற்குள்ளாக வரவேயில்லை. இதுதான் நிரந்தரமான வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருக்கிறான். தன்னுடைய வாழ்வை மாற்றுவதற்காக, அவனுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை, வசதிகளை அவன் உதறித்தள்ளவிடுகிறான். ஆனால், தீர்ப்பிற்கு பிறகு அவன் மனம் வருந்துகிறான். தான் செய்தது தவறு என்பது, அவனுக்குத் தெரிகிறது. இருந்தாலும், காலம் கடந்துவிட்ட அந்த தருணத்தில், அவன் ஆபிரகாமிடம் மன்றாடுகிறான். ஆனால், கடந்தது முடிவடைந்துவிட்டது. இனிமேல், அவனுக்கு வாழ்வு இல்லை. இழந்தது, எக்காலத்திற்கும் இழந்தது தான்.

நாமும் இந்த செல்வந்தனைப்போல, கடவுள் நமக்குத்தரக்கூடிய பல வாய்ப்புக்களை, வசதிகளை பொருட்டாக மதிக்காமல், உதறிக்கொண்டிருக்கிறோம். திருந்துவதற்கான சந்தர்ப்பங்களை புறக்கணித்துக்கொண்டிருக்கிறோம். வாய்ப்புக்களைப் பயன்படுத்தி நமது வாழ்வை மாற்றிக்கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.