துணிவும் நம்பிக்கையும்!

பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண்ணை இயேசு நலப்படுத்தும் நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். இயேசு ஏன் அந்தப் பெண்ணிடம் “மகளே, துணிவோடிரு. உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று””“ என்றார்?

காரணம், அந்தப் பெண் இயேசுவின் முன்னால் வர அஞ்சி, “அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்“. இயேசுவின் முன்னே வர நம்பிக்கையும், துணிவும் இல்லாத காரணத்தை இயேசு உணர்ந்து அவரை ஊக்குவிக்கும் வண்ணம் “துணிவோடிரு“ என்கிறார். அந்தப் பெண் தம்மைத் “தகுதியற்றவர்“ எனக் கருதியிருக்கலாம். ஆனால், இயேசு அவரது தயக்கத்தைப் போக்குகிறார்.

நாமும்கூட சில வேளைகளில் நம்பிக்கைக் குறைவினாலும், தயக்கத்தினாலும், பாவ உணர்வினாலும் இயேசுவின் முன் செல்லத் தயங்குகிறோம். நம் போன்றவர்களுக்குத்தான் எபிரேயர் திருமடல் பின்வரும் அறிவுரையை வழங்குகிறது: “நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்லர். மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர். எனினும், பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்ட்டையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக”“ (எபி 4: 15-16).

எனவே, நாமும் இயேசுவைத் துணிவுடனும், நம்பிக்கையுடனும் அணுகிச் செல்வோமாக!

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் அச்சத்தையும், தயக்கத்தையும் போக்குவதற்காக நன்றி கூறுகிறோம் ஆமென்.

~ அருள்பணி. குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.