தூய ஆவியானவரின் வழிநடத்துதல்

திருத்தூதர்பணி 20: 28 – 38

எபேசு நகரிலிருந்து, மிலேத்துவிற்கு மூப்பர்களை அழைத்த பவுல், அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். அங்கிருந்து தான், எருசலேம் செல்லவிருப்பதாகவும், இனிமேல் அவர்களை காண மாட்டேன் எனவும் சொல்கிறார். பவுலின் இந்த வார்த்தைகளை இயேசுவின் வார்த்தைகளோடு நாம் இணைத்துப் பார்க்கலாம். எருசலேம் செல்வது என்பது, இயேசுவுக்கு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதாகும். எருசலேம் பயணம் எப்படி அமையப்போகிறது என்பது இயேசுவுக்கு நன்றாக தெரிந்திருந்தது. அதுதான், தன்னுடைய கடைசி பயணம் என்று அறிந்திருந்தார். அறிந்திருந்தார் என்பதைவிட, தூய ஆவியானவர் அவருக்கு உணர்த்தியிருந்தார். கிட்டத்தட்ட அதே போல ஒரு சூழ்நிலைதான், பவுலடியாரின் வாழ்விலும் நடைபெறுகிறது.

எருசலேமுக்கு செல்கிற தன்னுடைய பயணம் பாடுகளின் பயணம் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அவர் பலவிதமான பாடுகளை தாங்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்திருந்தார். உணர்ந்திருந்தார் என்பதை விட, தூய ஆவியானவர் அவருக்கு வெளிப்படுத்தியிருந்தார். இறைத்திட்டத்திற்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறபோது, தூய ஆவியானவர் நமக்கு நடக்கவிருக்கிற நிகழ்வுகளை உணர்த்துகிறார். நம்மை தயார்படுத்துகிறார். எப்படியிருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்கிற மனநிலையை நமக்கு வழங்குகிறார்.

நம்முடைய வாழ்வில் தூய ஆவியானவர் நம்மை இயக்குவதற்கு, நம்மில் செயல்படுவதற்கு நாம ஒத்துழைப்பு நல்க வேண்டும். இறைவனின் திட்டம் என்ன? என்பதை அறிந்து, அதற்கேற்ப நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆவியானவரின் வழிநடத்துதல் நம் வாழ்வில் இருக்குமாறு, அவருக்கு நம்மையே ஒப்புக்கொடுக்க வேண்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.