நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்

திருப்பாடல் 119: 66, 68, 76, 77, 93, 94

வாழ்க்கை என்பது சிக்கல்கள் நிறைந்தது என்று சொல்கிறோம். இது உண்மை தானா? என்று சிந்தித்து, அதற்கான நிதர்சனத்தை நாம் பார்க்கிறபோது, அது பொய்யான தோற்றம் என்பது புலப்படுகிறது. வாழ்க்கை என்பது சிக்கலானது அல்ல, அதை நாம் தான் சிக்கல் நிறைந்ததாக மாற்றுகிறோம். உண்மையில் வாழ்க்கை என்பது அற்புதமானது. அழகானது. நம்முடைய வாழ்க்கை அழகானதாக அற்புதமானதாக இருக்க வேண்டுமென்றால், என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் என்பதை, இன்றைய திருப்பாடல் அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது.

வாழ்க்கையில் நடக்கும் அநேக பிரச்சனைகளுக்கு நாம் எடுக்கிற தவறான முடிவுகள் தான் காரணமாக இருக்கிறது. முடிவுகளை சரியாக எடுக்கத் தெரியாததன் விளைவு, நாம் பிரச்சனைக்குள்ளாக மாட்டிவிடுகிறோம். முடிவுகளை நாம் எடுக்கிறபோது, அறிவாற்றலோடு, நன்மதியோடு எடுக்க வேண்டும். உணர்வுகளுக்கு மட்டும் இடம் கொடுக்காமல், பொறுமையாகச் சிந்தித்து, நல்ல முறையில் செபித்து, அனுபவத்தின் அடிப்படையில் நேர்மையான உள்ளத்தோடு நாம் எடுக்கிற முடிவுகள் நிச்சயம் நம்முடைய சிக்கல்களிலிருந்து நமக்கு விடுதலை தரும். அப்படி எடுக்கிற முடிவுகள் நிச்சயம் நம்மை எப்போதும், சிக்கல்கள் இல்லாத வாழ்வு வாழ உதவிசெய்யும்.

சாலமோன் அரசர் கடவுள் அவரிடத்தில் என்ன வேண்டும்? என்று கேட்டபோது, இதைத்தான் கேட்டார். வாழ்க்கையின் வெற்றி, நாம் எடுக்கும் முடிவில் இருக்கிறது என்பதை அவர் உணர்ந்ததால் அந்த கொடையை கடவுளிடம் கேட்டார். நாமும் கடவுளிடம் இந்த கொடைகளுக்காக மன்றாடுவோம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.