நன்றாக யாவற்றையும் செய்கிறார்

காது கேளாதவரின் நிலைமை உண்மையிலேயே, மிக மிக கடினமானது. அவர்களின் நிலையும் தர்மசங்கடமானது. யாராவது அவர்களைப்பற்றிப் பேசினாலும், சிரித்தாலும், அவர்களைப்பற்றிப் பேசுவது போலவும், அவர்களைப்பரிகசிப்பது போலவும் தான் இருக்கும். அப்படிப்பட்டச் சூழ்நிலையில்தான் இந்த மனிதனும் இருந்திருக்க வேண்டும். கண் இல்லையென்றால் கூட, தங்களை யார் என்ன சொல்கிறார்கள் என்பது தெரியாமல் இருக்கும். ஆனால், தங்களைப்பற்றிப்பேசுவதை உணர்ந்தாலும், பதில் சொல்ல முடியாத நிலைமை உண்மையிலேயே பரிதாபமானது.

இயேசு அந்த மனிதனின் உணர்வுகளை அறிந்து கொள்கிறார். அவன் வாழ்வில்பட்ட வலிகளை இயேசு நிச்சயமாக உணர்ந்திருக்க வேண்டும். எனவேதான், அவனைத் தனியே அவர் அழைத்துச்செல்கிறார். அவனை ஒரு நோயாளியாக மட்டும் இயேசு பார்க்கவில்லை. அவனை ஒரு மனிதனாக, உணர்வுள்ளவனாகப் பார்க்கிறார். இயேசுவின் குணப்படுத்துகின்ற நிகழ்ச்சி, அவரை மக்கள் மத்தியில் ”நன்றாக யாவற்றையும் செய்கிறவராகக்” காட்டுகிறது. இயேசு நல்லது செய்ய வந்தார் என்பதைவிடு, நல்லதை மீட்க வந்தார் என்பது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், தொடக்கத்தில் கடவுள் இந்த உலகத்தைப்படைத்த போது, தான் படைத்த அனைத்தும் நல்லதென இருக்கக்கண்டார். ஆனால், மனித பலவீனம் அவற்றைக் கறைப்படுத்தியது. இப்போது அவர் மீண்டும் அதை மீட்டெடுக்கிறார்.

இந்த உலகத்தை நல்லதாக மாற்றுகின்ற வழியை, வழிமுறையை இயேசு செய்திருக்கிறார். நம்மையும் செய்யக்காட்டியிருக்கிறார். இந்த உலகத்தை நாமும் நல்ல முறையில் இயங்க, நமது ஒத்துழைப்பைக் கொடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.