நீரே என் மைந்தர்

திருப்பாடல் 2: 6 – 7, 8 – 9, 10 – 11
”நீரே என் மைந்தர்”

தாவீது அரசர் இஸ்ரயேலின் மக்களின் அரசராக திருநிலைப்படுத்தப்பட்டபோது பலவிதமான எதிர்ப்புக்கள் எழுந்தன. கடவுள் இறைவாக்கினர் சாமுவேல் மூலமாக அவரை, இஸ்ரயேல் மக்களுக்கு தலைவனாக ஏற்படுத்தினார். தாவீது தொடக்கத்தில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், காலப்போக்கில் அவர் அரசராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இந்த பிண்ணனியில், இஸ்ரயேல் மக்களின் மெசியாவைப் பற்றி இந்த திருப்பாடல் நமக்கு முன்னறிவிக்கிறது.

நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து, மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க தொடங்கியபோது, அதிகாரவர்க்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மக்களின் பேராதரவு அவருக்கு இருந்தாலும், அதிகாரவர்க்கம் தங்களின் அதிகாரத்தினால், அவரைச் சிலுவைச்சாவுக்கு கையளித்தது. ஆனாலும், தன்னுடைய உயிர்ப்பு மூலமாக, இயேசு தன்னை நிலைநிறுத்துகிறார். அரசர் என்பவர் மக்களால் அல்ல, கடவுளால் அங்கீகரிக்கப்பட்டவர். கடவுள் அவரை கைவிட மாட்டார். அவர் எந்நாளும் அவருக்கு துணையாய் இருப்பார் என்பதைத்தான் இந்த திருப்பாடல், நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

நமது வாழ்வில் கடவுளால் தேர்ந்தெடுக்க்ப்படுகிறபோது, நாம் அவரது கரங்களில் கருவியாக இருந்தால் போதும். கடவுள் நம்மை வழிநடத்துவார். அவர் நமது கரம்பற்றி நம்மைக் காப்பாற்றுவார். நமது வாழ்க்கையை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக மாற்றுவார்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.