பகைமை நமக்குள் வேண்டாம்

கடவுளை நாம் சந்திக்க, நமக்கு தடைக்கல்லாக இருப்பதோ, அல்லது கடவுளை எதிர்கொள்ள நாம் வலுவில்லாமல் இருப்பதற்கோ, முக்கியமான காரணம், நமது பகைமை உணர்வு. மன்னிப்பு தான் நாம் அடைய வேண்டிய இலக்கு என்பது, கிறிஸ்தவத்தின் அடித்தளம். அது சிறிது காலம் எடுக்கலாம். அந்த இலக்கு என்றாவது ஒருநாள் நாம் அடைந்தே ஆக வேண்டும். அந்த பகைமை உணர்வை எவ்வளவு விரைவாக, நம்மிடமிருந்து நம்மால் அகற்ற முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அகற்றுவது நமக்கு நல்லது, என்பதுதான் இன்றைய நற்செய்தி நமக்குத்தரும் செய்தியாக இருக்கிறது.

இந்த உலகத்தில் நாடுகளுக்கு இடையே வெறுப்புணர்வு அதிகமாக இருக்கக்கூடிய காலக்கட்டம் இது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அரசியல்வாதிகள் தங்களின் சுய இலாபத்திற்காக பல வேளைகளில், இது போன்ற பகைமையுணர்வுக்கு, தீனி போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மை மக்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள், அவ்வப்போது, இவற்றைத்தூண்டிவிட்டு, அவர்களை தங்களின் அடிமைகளாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இருக்கிற பகைமை உணர்வுக்கு நாம் விலை கொடுத்தே ஆக வேண்டும். அதற்கான, தண்டமையை அனுபவித்தே ஆக வேண்டும். இருக்கக்கூடிய சிறிய பகைமை என்றாலும், நாம் அதை தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், அதற்கான தண்டனையையும், நாம் பெற்றே ஆக வேண்டும்.

நமது வாழ்வில், நம்மை சுற்றி வாழக்கூடிய நமது சகோதர, சகோதரிகளுடன் நெருங்கிய உறவுடன் வாழ்கிறோமா? எது, அவர்களோடு நான் நல்ல உறவோடு வாழ்வதற்கு, தடையாக இருக்கிறது? அந்த தடைகளை நாம் எப்படி, அகற்ற முடியும்? எப்படி, இருக்கிற சிறிய பகைமை உணர்வுகளையும், என்னால், களைய முடியும் என்று சிந்திப்போம். அதற்கான முயற்சிகளை எடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.