படைகளின் ஆண்டவர் இவர்

திருப்பாடல் 24: 7, 8, 9, 10

படைகளின் ஆண்டவர் என்கிற வார்த்தை, பழைய ஏற்பாட்டு நூலில் ஏறக்குறைய 261 முறை வருகிறது. 1சாமுவேல் 1: 3 ல், முதன்முறையாக இந்த வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. விண்ணகத்தில் இருக்கிற படைகளுக்கு தலைவராக ஆண்டவர் இருக்கிறார் என்பதுதான் இதனுடைய பொருளாகும். இஸ்ரயேல் மக்களின் படைகளுக்கும் கடவுள் தான் தலைவர் என்பதையும் மறைமுகமாகக் குறிக்கக்கூடிய சொற்களாகவும் இவற்றைப் பார்க்கலாம். தாவீது அரசர், படைகளின் ஆண்டவர் என்று சொல்கிறபோது, இந்த விண்ணகத்திற்கு மட்டுமல்லாது, மண்ணகத்திற்கும், இங்கிருக்கிற படைகளுக்கும் ஆண்டவர் தான் தலைவராக இருக்கிற என்கிற பொருளில், இங்கே எழுதுகிறார். ஆக, கடவுள் தான் அனைத்திற்கும் அதிபதி என்பதை, இந்த வார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

படைகளின் தலைவராக இருக்கிறவர் தன்னுடை சேனையை வழிநடத்தி, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்க வேண்டும். விண்ணகத்திற்கும், மண்ணகத்திற்கும் அதிபதியாக இருக்கக்கூடிய கடவுள் தன்னுடைய மகனை இந்த உலகத்திற்கு அனுப்புகிறார். பாவத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொடுப்பதற்காக தன் மகனை அனுப்புகிறார். ஏனென்றால், பாவத்திலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்வதற்கான ஆற்றல், மனிதகுலத்திற்கு இல்லை. எனவே தான், கடவுள் அந்த முயற்சியை எடுக்கிறார். அதனைத்தான் சிமியோனின் வார்த்தைகளும், அன்னாவின் வார்த்தைகளும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

நம்மைப் பாதுகாப்பதற்காக கடவுள் தன்னுடைய ஒரே மகனையே பலியாகக் கொடுத்திருக்கிறார். அந்த நிகழ்வை நாம் திருப்பலியில் ஒவ்வொருநாளும் புதுப்பித்து, நம்மையே புனிதப்படுத்த அழைக்கப்படுகின்றோம். கடவுள் நம்மை விடுதலை வாழ்விற்கு வழிநடத்துவார் என்கிற நம்பிக்கை உணர்வை, நாம் நமது வாழ்வில் எப்போதும் கொண்டிருப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.